20 ஆகஸ்ட் 2011

அண்ணனிடமிருந்து என்னை பிரிக்க முயற்சி செய்கிறார்கள்"கோத்தபாய புலம்பல்.

இந்திய தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் ருடேக்கு அண்மையில் தான் வழங்கிய பேட்டியை அடிப்படையாகக் கொண்டு "இந்து' பத்திரிகையானது தன்னை இலக்கு வைத்திருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் வியாழக்கிழமை கவலை தெரிவித்திருக்கிறார்.
தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் சார்பில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜா வணசுந்தரவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வுடன் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் யுத்தத்திற்குப் பின்னரான சவால்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றியபோதே பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2011 ஆகஸ்ட் 11 இல் "இந்து' பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கமானது "அவரின் அலுவல்களைச் சார்ந்திராத உணர்வுபூர்வமான விடயங்கள் தொடர்பாக அவரின் சகோதரரின் பிரக்ஞை பிரவாகத்திலிருந்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னைத் தான் தூர விலக்கி வைத்திருக்க வேண்டுமென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக' பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் தன்னை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தும் அந்தப் பேட்டி தொடர்பாக தன்னை சாடியிருந்தமை குறித்து தான் ஆச்சரியப்பட்டதாக கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். போர்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் முகமாக கொழும்பு ஹில்டனில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கை விபர ஆய்வு மற்றும் ஒளிநாடா அங்குரார்ப்பண நிகழ்வின்போது அந்தப் பேட்டி அளிக்கப்பட்டிருந்தது.
ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியின் நிருபருக்கு பேட்டியளிக்க நான் விரும்பியிருக்கவில்லை. ஆயினும் நான் தயக்கத்துடன் இணங்கியிருந்தேன். அது என்னை எங்கு கொண்டு சென்று விட்டுள்ளது என்பதை பாருங்கள். என்னிடம் இருந்து எனது சகோதரனை தூர விலக்கி வைப்பதற்கு இந்து இப்போது விரும்பியுள்ளது என்று ராஜபக்ஷ கூறியுள்ளார். உண்மையில் இந்திய நிருபர், சிறப்பான செய்தியை வெளியிடுவதாக எனக்கு உறுதியளித்திருந்தார். எனது பிரதிமையைக் கட்டியெழுப்புவதாக வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
"கட்டுக்குள் நிற்காத ஒரு சகோதரர்' என்று தலையங்கமிட்டு இந்து ஆசிரியர் தலையங்கத்தை தீட்டியிருந்தது. அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் தலையங்கமானது பிரிட்டிஷ் பிரஜையான தமிழர் தொடர்பாக பாலியல் ரீதியான கருத்துகளை தெரிவித்ததாக அவருக்கு எதிராக நோக்கத்துடனான நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்திருந்தது. மூன்று விவகாரங்கள் தொடர்பாக பேசியதாக தமக்கு எதிராக இந்திய ஊடகங்கள் சாடியிருப்பதாக அவர் கூறியுள்ளார். யுத்தத்திற்குப் பின்னரான அதிகாரப்பகிர்வு, வட,கிழக்கு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு, தமிழ்பேசும் பெண்கள் மீதான வல்லுறவுக் குற்றச்சாட்டு போன்ற மூன்று விவகாரங்கள் குறித்து இந்திய ஊடகங்கள் கருத்துத் தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அதிகாரப்பகிர்வு விவகாரம் தொடர்பாக குறிப்பாக கருத்துத் தெரிவிக்க தான் விரும்பியிருந்திராத போதிலும் தனது தனிப்பட்ட அபிப்பிராயம் குறித்து அறிந்து கொள்வதில் தான் திருப்தியடைவாரென்று அந்த நிருபர் கூறியதால் தான் இறுதியில் அதனைத் தெரிவித்ததாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் இப்போது அழிக்கப்பட்டுள்ளதால் நிலைமை மாற்றமடைந்துள்ளதாக தான் நம்புவதாகக் கூறியதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வடபகுதி தமிழர்களுக்கான நிவாரணம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் அடிக்கடி அழைப்பு விடுப்பது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த பாதுகாப்புச் செயலாளர், அவர் (ஜெயலலிதா) உண்மையில் கரிசனை கொண்டிருந்தால் எமது வட பகுதிக் கடலில் அவரின் (ஜெயலலிதாவின்) நாட்டவர்கள் ஊடுருவுவதை நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க முடியுமென பாதுகாப்புச் செயலாளர் கூறியிருந்தார். அதிகளவில் ஊடுருவி மீன்பிடிப்பதன் மூலம் வடபகுதித் தமிழர்களின் ஜீவாதாரத்தை தமிழ்நாட்டு மீனவ சமூகம் பறித்துக் கொண்டிருக்கின்றது.
அழகான பிரிட்டிஷ் பிரஜை யுத்தத்தின் முடிவில் இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இலங்கைப் படையினரை வல்லுறவுக்காகக் குற்றஞ்சாட்டுவது நகைப்புக்கிடமானதாக அமையும் என்று ராஜபக்ஷ கூறியிருந்தார். நான் முதலில் கூறியிருந்த நிலைப்பாட்டில் உள்ளேன். அங்கு கேள்விக்கு இடமில்லை என அவர் கூறியுள்ளார்.
சனல்4 தொலைக்காட்சியால் பேட்டி காணப்பட்ட பிரிட்டிஷ் பிரஜையான தமிழ்ப் பெண் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் எனவும் அவர் கவர்ச்சிகரமானவராக இருந்ததாகவும் ஆனால், இலங்கைப் படையினரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டோ அல்லது கொல்லப்பட்டோ இருக்கவில்லை எனவும் படையினர் மீது பாலியல் குற்றச்சாட்டானது உண்மையாக இருக்க முடியாதென்றும் கோதாபய ராஜபக்ஷ கூறியிருந்ததாக இந்திய தொலைக்காட்சி மேற்கோள்காட்டியிருந்தது.
இந்த அறிக்கை மட்டுமே கோதாபய ராஜபக்ஷவை தவறு கண்டுபிடிப்பதற்கு போதியதாக அமையுமென இந்து குறிப்பிட்டிருந்தது.
சர்வதேச சமூகத்தின் ஒரு பிரிவினரால் ஆட்சி மாற்றத்துக்கு அனுசரணை வழங்குவதற்கான அவர்களின் தந்திரோபாயத்தின் ஓர் அங்கமாக இது இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பதிலளித்தால் விரைவில் புதிய குற்றச்சாட்டுகள் தொடுக்கப்படும் என்று தோன்றுகின்றதெனவும் அவர் கூறியதாக "த ஐலண்ட் பத்திரிகை' நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக