18 ஆகஸ்ட் 2011

ஈழத்தில் தமிழர்களை கொன்றொழித்த இந்திய அரசின் கொலை வெறி இன்னும் அடங்கவில்லை!

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், பேரறிவாளனின் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மையார், தமிழ்த் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், தமிழுரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் புலவர் கி.த.பச்சையப்பனார், ஓவியர் வீரசந்தனம், எழுகதிர் ஆசிரியர் முனைவர் அருகோ, தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் புலவர் சி.பா.அருட்கண்ணனார், புலவர் இராமச்சந்திரன் உள்ளிட்டேர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கிப் பேசினார்.
அவர் பேசும் போது, ”தமிழினத்தின் அடையாளமாக சிறையில் உள்ள இம்மூவரும் இன்றுள்ளனர். செய்யாத குற்றத்திற்காக அவர்கள் ஏற்கெனவே 21 ஆண்டுகள் அநியாயமாக சிறை வைக்கப்பட்டு விட்டனர்.
இந்நிலையில், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது அநீதியாகும். செய்யாத குற்றத்திற்காக ஏற்கெனவே ஆயுள் தண்டனை அனுபவித்து விட்ட அவர்களுக்குத் தூக்குத் தண்டனை தருவது எந்த வித்ததிலும் நியாமல்ல.
இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்த இந்தியாவின் வெறி இன்னும் அடங்கவில்லை. அதன் தொடர்ச்சியாகத் தான் இம்மூவரையும் காவு கொள்ள இந்தியத் துடிக்கிறது.
உலகெங்கும் போர்க் குற்றவாளி அரசாக நிற்கும் இலங்கையை காப்பாற்றத் துடிக்கும் இந்தியா, அந்நாட்டுக்கு செய்த இராணுவ உதவிகளை மறைக்கவும், திசைத்திருப்பவும் தான் இந்த மூன்று இளைஞர்களை தூக்குக் கொட்டடிக்கு அனுப்பியிருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்ட விதி என் 161ன்படி தமிழக ஆளுநருக்கு மரண தண்டனையை இரத்து செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் பயன்படுத்த, தமிழக அரசு அவருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக