13 நவம்பர் 2010

தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியம்!புத்திஜீவிகள் சாட்சியம்.

கடந்த காலங்களில் மிதவாதத் தலைவர்கள் தொடக்கம் விடுதலைப்புலிகள் வரையில் தென்பகுதி அரசியல் தலைவர்கள், அரசாங்கங்களுடன் நடத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக தோல்வியிலேயே முடிபடைந்தன.ஆயினும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எந்த முடிபும் காணப்படவில்லை என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் நேற்று சாட்சியமளித்த புத்திஜீவிகள் சுட்டிக்காட்டினர்.
நேற்று பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், பேராசிரியர் ஜீவன் கூல், பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் மாநகரசபை ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்டோர் நேற்று சாட்சியமளித்தனர். சாட்சியத்தின் போது ஒரே கருத்துக்களை முன்வைத்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்திவருகின்ற கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்னால் இரண்டாவது நாளாக நேற்று அளிக்கப்பட்ட சாட்சியங்களில் பெரும்பாலானவை இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்தினரால் கூட்டிச் செல்லப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்களின் கதி என்ன என்பது தெரியாதிருப்பதாக நேற்று முன்தினம் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று அளிக்கப்பட்ட சாட்சியத்தின் போது தமிழர்களது இன அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஆட்சியதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் மற்றும் யாழ்.மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.
கடந்த காலங்களில் மிதவாதத் தலைவர்கள் தொடக்கம் விடுதலைப்புலிகள் வரையில் தென்பகுதி அரசியல் தலைவர்கள், அரசாங்கங்களுடன் நடத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக தோல்வியிலேயே முடிபடைந்ததாகவும் ஆயினும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முடிபு காணப்படவில்லை என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் நேற்று சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது.
அரசியல் தீர்வு அவசியம்:
தமிழர் தாயகமாகிய வடகிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மொழிவழித் தமிழ் அரசின் அமைப்பில்தான் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் நேற்று நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் கூறினார்.
இத்தகைய அரசு பிராந்திய அடிப்படையிலே வடகிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்ற நேரத்தில் மத்தியில் போதியளவு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்.இவ்வாறான நிலைப்பாட்டிலேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். இதற்கான அடிப்படைக்காரணங்களைப் பார்க்கும்போது அரசியல் திருத்தங்களிலே அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக அமைகின்ற அரசியல் அபிலாசைகள் உள்ளடக்கப்படவில்லை.இவ்வாறான அரசியல் திருத்தச் சட்டங்களை மாற்றி அமைக்கின்ற போதே பல்லின மக்கள் பரந்து வாழ்கின்ற நாடாக இலங்கை புதுப்பொலிவு பெறும் என்றார். ஆயுதப் போராட்டம் ஏற்படலாம்
யுத்தம் முடிபடைந்துள்ள போதும் தமிழ் மக்கள் அபிலாசைகள் முடிபு பெறவில்லை. சாத்வீக வழியில் அதனை பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். இல்லையேல் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வருவதை எவராலும் தடுக்கமுடியாது என நல்லிணக்க ஆணைக்குழு முன் சீ.வீ.கே சிவஞானம் அளித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.அடிப்படையான கட்டுமானப் பணிகளை செய்வதன் மூலம் தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு முடிபை எட்டமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
அரச கரும மொழியாக தமிழை உள்ளடக்க வேண்டும்:
அரசியல் அமைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று தமிழ் மொழியை அரச கருமமொழியாக அறிவிக்க வேண்டும் என பேராசிரியரும் சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவின் தலைவரு மான பொ.பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.தமிழ்க் கைதிகளின் விடுதலை, மீள் குடி யேற்றம் போன்றவை குறித்து பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக