19 நவம்பர் 2010

எழுச்சியுடன் மாவீரர் நாளை முன்னெடுங்கள்!

உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வழமைபோன்று இந்த ஆண்டும் மாவீரர் நாளை மிகவும் எழுச்சியுடன் முன்னெடுக்க வேண்டும் என, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் ஐயா அழைப்பு விடுத்துள்ளார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் தலைவர் நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.
இலங்கையில் தமிழர் மண்ணை மீட்கவும் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் நடைபெற்ற போரில் உயிர்த்தியாகம் செய்த மானமறவர்களை நினைத்து வணங்குவதற்காக மாவீரர் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மாவீரர் நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
வரலாறு காணாத வகையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் ஈவுஇரக்கமில்லாமல் சிங்கள இராணுவ வெறியர்களால் பதைக்கப்பதைக்கப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
முள்வேலி முகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் அடைக்கப்பட்டு போதுமான உணவோ மருந்தோ இல்லாமல் சிறிதுசிறிதாகச் செத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் வேகமாக நடைபெறுகின்றன. தமிழர்கள் தாங்கள் வாழையடி வாழையாக வாழ்ந்த மண்ணிலிருந்து விரட்டப்படுகிறார்கள்.
இந்த அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற உணர்வை உலகத் தமிழர்கள் பெறுவதற்காகவும், அப்பட்டமான போர்க்குற்றங்களைச் செய்துள்ள இராசபக்சே கும்பலை போர்க்குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு உறுதிபூணவும் இந்த நாளில் தமிழர்கள் சூளுரைக்க வேண்டும்.
உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் மாவீரர் நாளை இந்த உறுதியோடு கொண்டாட வேண்டுமென்று உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் வேண்டிக்கொள்கிறேன்.
அன்புள்ள
(பழ. நெடுமாறன்)
தலைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக