15 நவம்பர் 2010

நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்களவர்கள் உடன் வெளியேற வேண்டும்!

நாவற்குழியில் அரசாங்கக் காணிகளில் குடியேறிய சிங்களக் குடும்பங்கள் ஒரு வாரத்திற்குள் வெளியேற்றப்படவேண்டும். தவறினால் நீதிமன்றங்களை நாடுவதே ஒரேவழியாகும்.இவ்வாறு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
அவரின் இல்லத்தில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,நாவற்குழியில் அரசாங்க காணிகளில் திடீரென குடியேறிய சிங்கள குடும்பங்களின் நடவடிக்கை அரசியல் பின்னணி கொண்டது மாத்திரம் அல்லாது முற்றிலும் சட்டவிரோதமானதுமாகும்.
தென்னிலங்கையில் இருந்து யாழ்.புகையிரத நிலைய கட்டிடங்களில் அத்துமீறி குடியேறி, தற்போது நாவற்குழிக்கு நகர்ந்து அரசாங்க காணியில் குடியேறியுள்ளனர். இந்த நடவடிக்கையின் பின்னணியில் பலமானதோர் அரசியல் சக்தி செயற்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இது ஓர் ஆழம் பார்க்கும் நடவடிக்கை. இதனை ஒரு பொழுதும் கைகட்டி பார்த்திருக்க முடியாது. இந்த சிங்கள குடும்பங்களுக்கு யாழ்ப்பாணத்தில் சொந்தமாகக் காணிகள்இல்லை. இவர்கள் இங்கு 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வசித்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. ஒருசிலர் இங்கே வாழ்ந்திருக்கக் கூடும்.
நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் இவர்கள் யாழ்ப்பாணத்தில் காணிகளை சொந்தமாக வாங்கி குடியேறுவதையோ அல்லது வாடகைக்கு வீடுகளை எடுத்து வசிப்பதையோ எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் முன்பு இங்கு வாழ்ந்தோம் எனக் கூறிக்கொண்டு அரசாங்க காணிகளில் அத்துமீறி குடியேறு வதில் அரசியல் நோக்கம் இருப்பது அப்பட்டமானது. இந்த சட்டவிரோத நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டே ஆகவேண்டும்.
அரசாங்கக் காணிகள் தொடர்பில் இலங்கையின் அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் இலங்கை அரசாங்கமும் வட மாகாண சபையும் அதிகார ஆதிக்கத்தைக் கொண்டுள்ளன. எனவே இந்த இரண்டு தரப்பும் நாவற்குழி விவகாரம் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளன. இச் சட்டவிரோத குடியேற்றவாசிகளை சம்பந்தப்பட்ட அரசாங்க காணிகளில் இருந்து அப்புறப்படுத்தவோ அல்லது அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கவோ இலங்கை அரசாங்கமும் வடமாகாண சபையும் தவறினால் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இதற்கென ஏற்கெனவே கொழும்பில் உயர் நீதிமன்றங்களில் தொழில் புரியும் தமிழ் சட்டத்தரணிகள் சிலரைக்கொண்ட குழு சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக