09 நவம்பர் 2010

யாழில் பேஸ்புக் ஏற்படுத்திய இளவயதுக் கர்ப்பம்: ஒரு ரிப்போர்ட்.

தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த பாடசாலையில் உயர்தரம் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி தனது மேலதிக கற்றல் நடவடிக்கைக்காக சனி, ஞாயிறு மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் யாழ்ப்பாண நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்று வந்துள்ளார். போக்குவரத்து பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட மாணவியின் தந்தை, தனது நண்பனின் நகரப்பகுதியில் உள்ள அவரது வீட்டில் அதே ஆண்டில் நகர்புற கல்லூரியில் கல்வி கற்கும் ஒரு மாணவியுடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
இருவரும் சேர்ந்து அந்த வீட்டில் உள்ள இணைய வசதி உள்ள கணனியில் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்து நண்பர்களுடன் அரட்டை அடித்துள்ளனர். குறிப்பிட்ட மாணவியின் 'பேஸ்புக்' ல் தொடர்பை ஏற்படுத்திய இளைஞன் ஒருவர் தான் தற்போது மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக தெரிவித்து நெருங்கிய நட்பினை பேஸ் புக் ஊடாக பெற்றுள்ளார். இந்த இளைஞனது தொடர்பை அடுத்து வீட்டு கணனியில் அரட்டை அடிப்பதை நிறுத்தி விட்டு, இணைய சேவை வழங்கும் நிலையங்களில் சென்று குறிப்பிட்ட மாணவி அந்த இளைஞனுடன் அரட்டை அடிக்கை ஆரம்பித்துள்ளார். நாளடைவில் தனது தொலைபேசி இலக்கத்தினை வழங்கி இளைஞனுடன் தொடர்புகளை பேணி இருந்துள்ளார்.
சில நட்களுக்குப் பின்னர் இருவரும் சந்தித்து பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளனர். சிறிது காலத்தின் பின் பாடசாலையில் குறிப்பிட்ட மாணவி அடிக்கடி வாந்தி எடுத்ததால் சந்தேகமடைந்த அதிபர் மற்றும் பாட ஆசிரியை மாணவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு இட்டபோது மாணவி மறுக்கவே பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெற்றோர் வீட்டில் மாணவியை கூட்டிச் சென்று விசாரிக்கும் போது உண்மை வெளியே வந்துள்ளது. ஆம் அவர் இப்போது கர்ப்பமாக உள்ளார். உடனடியாக குறிப்பிட்ட இளைஞனைப் பற்றி விசாரணைகளை தந்தை ஆரம்பித்தபோது இளைஞனின் பேஸ்புக் மாற்றப்பட்டும் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் செயலிழந்தும் காணப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இரகசியமாக பேணப்பட்டு வந்த இந்தச் சம்பவம் அந்தத் தந்தையின் அடாவடித் தனத்தால் பலருக்கும் தெரியவந்துள்ளது.
தனது மகளைக் கண்டிக்காத அந்தத் தந்தை, மாணவி தங்கியிருந்த தனது நண்பன் வீட்டிற்குச் சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை பேஸ்புக்கில் தொடர்பு கொண்ட இளைஞன் 1989ம் ஆண்டு 13ம் திகதி பிறந்தவர் என்றும் மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளதாகவும் அவரது பேஸ்புக் தரவுப்படி அவர் மானிப்பாயை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்தில் பிரபல தனியார் கல்லூரியில் கல்வி பயின்றதாகவும் "யாழ் மேனகன்" என்னும் புனைப் பெயரில் பேஸ்புக்கில் மாணவிகளுடன் இவர் அரட்டை அடிப்பதாகவும், மாணவியின் தோழி தெரிவித்துள்ளார். அத்தோடு குறிப்பிட்ட அம்மாணவியின் பேஸ்புக் நட்பு வட்டாரத்திலிருந்தும் அவ் இளைஞர் இபோது விலகி உள்ளார் எனத் தெரியவருகின்றது.
அப்படியாயின் அவர் திட்டமிட்டே இவ்வாறு செய்கிறாரா என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளது.
யாழில் பெருகிவரும் கலாச்சாரச் சீரழிவுகள் குறித்து மக்களும் பெற்றோரும், ஏன் ஊடகங்களும் கொஞ்சமாவது கவனம் செலுத்துவது நல்லது. இல்லையேல் அடுத்தவாரம் இன்னொரு குழந்தை அநாதரவான நிலையில் வீதியில் வீசப்படலாம். இல்லையேல் கிணற்றில் இருந்து பிணமாக எடுக்கப்படலாம், இது தேவைதானா?
நன்றி:அதிர்வு இணையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக