17 நவம்பர் 2010

போர்க்குற்ற சாட்சியங்களை வழங்குமாறு தமிழர் பேரவை வேண்டுகோள்!

சமீபத்தில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால், இலங்கை நிலை குறித்து ஆராய 3 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு ஒன்று நிறுவப்பட்டது. இவர்கள் இலங்கை செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை. இதனால் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் சாட்சிகளை வேண்டி நிற்கின்றனர்.
இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள், கடத்தப்பட்டு விடுதலையானவர்களின் உறவினர்கள், போருக்கு முன்னரும் பின்னரும் இறந்தவர்களின் உறவினர்கள் என அனைவரும் உடனடியாக முன் வந்து தமது சாட்சிகளை வழங்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது.
டிசம்பர் மாதம் 15ம் திகதியோடு ஐ.நாவால் வழங்கப்பட்ட கால எல்லை முடிவடைவதால் உடனடியாக உங்கள் சாட்சியங்களைக் கொடுத்து உதவுமாறு அது வேண்டி நிற்கிறது. உங்கள் பெயர்கள் உட்பட அனைத்து விடையங்களும் இரகசியமாகக் கையாளப்படும் என பிரித்தானிய தமிழர் பேரவை உறுதி தருகின்றது: 0044 207 183 4009 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நீங்கள் அழைப்பதன் மூலம் எங்கள் பிரதிநிதிகளை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
ஜ.நா ஏற்படுத்தித் தந்திருக்கும் இச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தவில்லை என்றால், வரலாற்றுத் தவறை இழைத்த தமிழர்கள் ஆகிவிடுவோம். எனவே விரைந்து செயல்படுங்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டி நிற்கிறது.
இலங்கை அரசை யுத்தக்குற்ற கூண்டில் ஏற்றவும், இன அழிப்பை உலகிற்கு எடுத்து உரைக்கவும் உங்கள் சாட்சியங்கள் பேருதவியாக இருக்கும். மாண்ட தமிழர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக