18 நவம்பர் 2010

உயிரை விட்டாலும் தீர்வின்றி உண்ணாநோன்பை விடேன்!-தேவதாசன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டாவது தடவை பதவி ஏற்பு நாளில் நான் உயிரை விடுவேனே தவிர தான் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என புதிய மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதி தேவதாசன் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய மகசின் சிறைச்சாலையில் தனது விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதமிருந்து வரும் கனகசபை தேவதாசனை சிறைச்சாலை நலன்புரிச் சங்கச் செயலாளர் வை எம் குணவர்த்தன அவர்கள் சந்தித்து நாளை இரண்டாவது தடவையாக ஜனாதிபதி அவர்கள் பதவிப் பிரமாணம் செய்யவிருப்பதால் தனது உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தபோதே தேவதாசன் அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்.
நான் தற்போது எந்த உறுதிமொழியையும் ஏற்கத்தயாராக இல்லை பலமுறை எனக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே ஜனாதிபதி அவர்கள் பதவிப் பிரமாணம் செய்யவிருப்பதற்காக நான் எனது உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை மாறாக இதே தினத்தில் நான் எனது உயிரையும் விடுவதற்கு தயாராக இருக்கின்றேன் என மிகவும் உறுதியாகத் தெரிவித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் திரு தேவதாசனின் உடல்நிலை மோசமடைந்து செல்வதாகவும் இவருக்கு தற்போது சரியாக பேசுவதற்கு கூட முடியாமல் இருப்பதாகவும் சக கைதிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக