03 செப்டம்பர் 2011

யாழ்,பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களப்படைகள் தாக்குதல்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை நேற்று இரவு இராணுவத்தினர் தாக்கினர் என்ற குற்றச்சாட்டு மாணவர்களால் தெரிவிக்கப்பட்டது. கிறீஸ் பூத விவகாரமே இந்தத் தாக்குதலுக்கு வழிவகுத்தது என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரவு 10.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழகப் பெண்கள் விடுதியின் மீது யாரோ விஷமிகள் கல்வீசியதை அடுத்து அவர்கள் தகவல் கொடுத்ததன் பேரில் ஆண்கள் விடுதியில் இருந்து மாணவர்கள் சிலர் பெண்கள் விடுதி இருந்த இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர்.
மாணவர்கள் அந்தப் பகுதிக்கு வந்தபோது, திடீரென இரண்டு ட்ரக்குகளில் அங்கு வந்த இராணுவத்தினர் தம்மில் இருவரைத் தாக்கினர் என்று மாணவர்கள் கூறினர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த விடுதிக் காப்பாளர், மாணவர்களை ஏன் தாக்குகிறீர்கள் என்று இராணுவத்தினரிடம் கடுமை காட்டியதும், “அவர்கள் கொட்டன்களுடன் நின்றார்கள் அதனால் தாக்கினோம்” என்று படையினர் பதிலளித்தனர் எனவும் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக விடுதிகளைச் சுற்றிய பகுதிகளில் இராணுவக் காவல் பலப்படுத்தப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக