23 செப்டம்பர் 2011

தளபதி ரமேசின் பாரியாரால் மகிந்தவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கேணல் ரமேஸின் மனைவி, இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.தமது கணவரை கொன்றமைக்கு எதிராக அவர் நேற்று மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயோர்க் தென்மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது ஐக்கிய நாடுகள் அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க்கில் தங்கியிருக்கும் நிலையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேணல் ரமேஸின் மனைவியின் சார்பில் வெளிநாட்டவருக்கு தகுதி என்ற அடிப்படையில் இந்த வழக்கை, சட்டத்தரணி விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தாக்கல் செய்தார்.
11 சிஐவி 6634 என்ற இலக்கத்தை கொண்ட இந்த வழக்கில், சனல் 4 காணொளியில் கேணல் ரமேஸ், இலங்கைப்படையினரால் அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் வைத்து விசாரணை செய்யப்படும் காட்சி, அவர் கொல்லப்பட்டதன் பின்னர் மற்றும் ஒரு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அவரது உடலை மனைவி அடையாளம் காட்டியமை என்பன சாட்சியங்களாக தெரிவிக்கப்படடுள்ளன.
இலங்கையின் முப்படைகளுக்கும் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே கேணல் ரமேஸின் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவரே போர்க்குற்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதாரங்களாக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழு, இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக வெளியிட்ட அறிக்கை. அதில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், தாக்கப்பட்ட மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கணக்கு காட்டப்பட்டாத இன்னும் 140 ஆயிரம் பொதுமக்களின் உயிரிழப்பு என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக