16 செப்டம்பர் 2011

ஜெனீவாவிற்கோ அமெரிக்க படை பலங்களுக்கோ ஸ்ரீலங்கா அஞ்சாதாம்!

ஜெனீவாவின் தீர்மானங்களுக்கோ ஐ.நா. உட்பட அமெரிக்காவின் படைப் பலங்களுக்கோ இலங்கை ஒருபோதும் அஞ்சாது. மீள் தலையீடுகளுக்கு எவராவது முயற்சித்தால் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார். ரொபேட் ஓ பிளேக் போர் குற்றச்சாட்டுக்களுக்கு அடி பணிய வைக்கவும் உள்நாட்டில் அதிகாரப் பகிர்வின் ஊடாக நாட்டை துண்டாடவுமே இலங்கை வந்தார். எனவே ,அரசாங்கம் உடனடியாக பிரிவினைவாதத்திற்கு ஏதுவான காரணிகளை தேசிய அரசியலில் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக கலாநிதி குணதாஸ அமரசேகர மேலும் தெரிவிக்கையில், ஜெனீவா அமர்விற்கு பான் கீ முன் நிபுணர் குழு அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார். எனவே, ஏதாவது வழியை பின்பற்றி நாட்டிற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை வெளிப்படையாகவே தெரிகின்றது. இதற்கு அரசாங்கம் அஞ்சாமல் முகம்கொடுக்க வேண்டும். பிரிவினைவாத சர்வதேச சூழ்ச்சிக்காரர்களின் நோக்கம் இலங்கையை துண்டாடுவதே ஆகும். நிபுணர்குழு அறிக்கை 6 மாத காலத்திற்கு பின்னர் பேசப்படும் என்றால் அது பாரிய ஆபத்தானதாகவே அமையும்.
எவ்வாறயினும் எந்தவொரு சர்வதேசத்தின் நடவடிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் இலங்கை அடிபணியாது. அமெரிக்கா, இலங்கை மீதான தலையீட்டை அத்துமீறி மேற் கொள்கின்றது. ரொபேட் ஓ பிளேக்கின் இலங்கை வருகை நாட்டிற்கு எதிரான காரியமாகவே உள்ளது. தமிழ் கூட்டமைப்பினரை அவர் சந்தித்தமையும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மையும் பிரிவினைவாத போராட்டத்திற்கு மீண்டும் வித்திடும் நடவடிக்கை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக