01 செப்டம்பர் 2011

சிங்கள அரச பயங்கரவாதம் தொடர்கிறது!கொக்குவிலிலும் மக்கள் மீது படைகள் தாக்குதல்.

யாழ்.கொக்குவில் பகுதியில் மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினை அடுத்து தென்பகுதி சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தினை அப்பகுதி மக்கள் அடித்து உடைத்ததை அடுத்து மக்கள் மீது இராணுவமும் பொலிஸாரும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்திருப்பதுடன் 17பேரை பொலிஸார் பிடித்துச் சென்றிருக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொக்குவில் மர்ம மனிதர்கள் இருவர் ஊருக்குள் நுழைந்ததை அவதானித்த மக்கள் அவர்களைத் துரத்திச் சென்றிருக்கின்றனர். இருவரும் தப்பி ஓடும் போது அங்கு தரித்து நின்றிருந்த சுற்றுலாவிற்காக அங்கு வந்திருந்த சிங்கள மக்கள் பயணித்திருந்த வாகனத்தினைச் சுற்றிச் சுற்றி ஓடியிருக்கின்றனர்.
அவர்கள் சுற்றி ஓடியதை அவதானித்த மக்கள் வாகனத்தில் தான் அவர்கள் வந்திருக்க வேண்டும் என எண்ணி வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி சேதம் ஏற்படுத்தியிருக்கின்றனர்.
சம்பவத்தினை அடுத்து வாகனச் சாரதி வாகனத்தினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார்.
அதன் தொடராக அந்தப் பகுதிக்கு சென்ற பெருமளவான இராணுவத்தினரும், பொலிஸாரும் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இளைஞர்கள் இருவரைப் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் இருந்த பற்றைக்காடு ஒன்றினுள் வீசியிருக்கின்றனர்.
அதேவேளை இளைஞர்கள் 17பேரை பொலிஸார் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றிருக்கின்றனர்.
இராணுவத்தினரும் பொலிஸாரும் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த பலர் தாமாகவே மருத்துவமனையில் சென்று அனுமதி பெற்றுக்கொண்டதாக எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக