01 ஏப்ரல் 2011

சமாதானம் ஏற்பட்டதாக சொன்னால் தமிழ் மக்கள் சிரிப்பார்கள்!

தமிழ்மக்கள் எதைச் செய்வதென்றாலும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டியுள்ளது. இதுவே யதார்த்தமாகும். இதனைத் தென்னிலங்கையிலிருந்து வருபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என நல்லூர் பங்குத்தந்தை அருட்பணி ஐ.டி.டிக்சன் தெரிவித்தார். நல்லிணக்கத்துக்கான வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பங்குத்தந்தை இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: நல்லிணக்கத்துக்கான சர்வமத ஒன்றியத்தினரே யாழ்ப்பாணத்தில் சமாதான பாதயாத்திரை செய்வதுக்கும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இந்த நிலையில் தமிழ்மக்களின் நிலைமை எப்படியிருக்கும்? இவ்வாறான பரிதாப நிலையிலேயே தமிழ்மக்களின் அவல வாழ்வு தொடர்கிறது. இயற்கைக் கடன் கழிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிபெறவேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்படலாம் இதனை தென்பகுதி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். யுத்தம் முடிவடைந்து சமாதானம் ஏற்பட்டுவிட்டது என்று சொன்னால் வட பகுதி மக்கள் சிரிப்பார்கள் ஏன் என்றால் சமாதானத்தின் விளைவை அவர்கள் இன்னமும் அனுபவிக்கவில்லை. சமாதானம் ஏற்பட்டது என்றால் அந்த மக்கள் ஏற்கமாட்டார்கள். என்றார் அவர். அவர் மேலும் கூறுகையில் எமது நாட்டில் ஐந்து மதங்கள் உள்ளன ஐந்தாவது மதம் கிரிக்கெட். அந்த விளையாட்டின் மூலம் அனைத்து இன மக்களும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் அணியிலுள்ள சிங்கள வீரர்கள் ஏனைய நாட்டுடன் விளையாடித் தோல்வியடையும் நிலை ஏற்படும் போது தமிழ் மக்கள் அந்தத் தோல்வியை நினைத்துக் கவலைப்படுகிறார் என்றார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கல்முனை ஸ்ரீ சுபத் தாராம மகாவிகாரையைச் சேர்ந்த வணரண்முத்துக்கல சங்கரத்னதேரர் கூறியதாவது: இன, மத, பேதங்களைக் கடந்து ஒரு நாட்டு மக்கள் என்ற உணர்வு எமக்குத் தேவை. வடபகுதி தமிழ்மக்களுக்குரியது. கிழக்குப் பகுதி தமிழ், முஸ்லிம் மக்களுக்குரியது தென் பகுதி சிங்கள மக்களுக்குரிய என நாம் உணர்வோ மானால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படாது என்றார். தமிழ்மொழியில் உரை நிகழ்த்திய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: எமது அமைப்பிடம் அதிக பணம் இல்லை. ஆனால் அதிக பாசம் இருக்கிறது. நாட்டில் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயன்று வருகிறோம். இன, மத, பேதங்களுக்கு நாம் இடமளிப்பதில்லை. சமாதானம் தொடர்பாக அதிகம் யோசிக்கவேண்டியதில்லை. அது மக்களது மனதில் ஏற்படவேண்டியது என்றார். அனுராதபுரம் சாம விகாரை வண விமல தேரர் கருத்துத் தெரிவிக்கையில், பொம்மைவெளிப் பகுதியில் மீளக் குடியமர்ந்துள்ள மக்களுக்கு உதவுவதற்குத் தீர்மானித்துள்ளோம். அவர்கள் மனிதர்கள் எதிர்நோக்கமுடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எமது அமைப்பு இன, மத வேறுபாடின்றி உதவ உள்ளது. என்றார். ஆரையம்பதி மௌலவி யு.எல்.எம். மக்தி கருத்துத் தெரிவிக்கையில் யுத்தத்தின் பின்னர் பௌதீக ரீதியான அபிவிருத்தி இடம்பெறுகிறது. உடைந்த, நொந்துபோன உள்ளங்களுக்கு ஆறுதல் கூற மதங்களால் மட்டுமே முடியும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக