29 ஏப்ரல் 2011

சர்வதேச தரத்திலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் அரசாங்கம் சர்வசே தரத்திலான விசாரணைகளை நடத்த வேண்டுமென தேசிய சமாதானப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு பரிந்துரைகளுக்கு நிகரான வகையில் சர்வதேச தரத்திலான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரித கதியில் மேற்கொள்ள முனைப்பு காட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புள்ளி விபரங்கள் உள்ளிட்ட தரவுகளை அரசாங்கம் வெளியிட வேண்டுமென தெரிவித்துள்ளது.
பிரச்சினைகளுக்கான மூல காரணிகளை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பிலான தமது அமைப்பின் நிலைப்பாட்டை வெளியிடும் நோக்கில் தேசிய சமாதானப் பேரவை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு நிகரான ஓர் கட்டமைப்பு இலங்கையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உள்நாட்டு ரீதியான பொறிமுறையில் அமைந்த தீர்மானங்கள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக