10 ஏப்ரல் 2011

யாழ்,இந்துக்கல்லூரி ஆசிரியையின் மரணம் கொலையா?

யாழ்.நகரில் பிரபல கல்லூரியில் பணியாற்றி வந்த இளம் ஆசிரியையின் மரணத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. சில்லாலை, சாந்தைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதான செல்வராஜா அனுஷா என்ற யாழ்.இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியையின் சடலமே நேற்றுமுன்தினம் வீட்டில் சேலையினால் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டது. உடலில் நகக் கீறல் காயங்கள் காணப்படும் அதேசமயம், வேறு சில தடயங்களும் இருப்பதால், இவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வீட்டிலுள்ள ஏனையோர் கோயிலுக்குச் சென்றுவிட்டனர். மரணமான ஆசிரியை பாடசாலை விட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அதன் பின்னரே அந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. கோயிலுக்குச் சென்றிருந்த இவரது குடும்பத்தவர்கள் திரும்பி வந்துள்ளனர். அப்போது யுவதி வீட்டில் இருக்கிறார் என்பதற்கான எந்த அறிகுறியோ அசுமாத்தமோ இருக்கவில்லை. அதையடுத்து, வீட்டார் உள்ளே சென்று பார்த்தபோது கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் அவரின் சடலம் காணப்பட்டது. முழந்தாள் நிலத்தில் பட்டும் படாமலும் மடிந்த நிலையில் சடலம் கிடந்தது. கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுக்கமாக அன்றி இளகிய நிலையில் காணப்பட்ட தாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். நேற்றையதினம் மல்லாகம் பதில் நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார். சடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்குமாறும் உடற் கூற்றுப் பரிசோதனை நடத்தி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார். யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி எஸ்.சிவஷரூபன் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தினார்.உடலில் கீறல் காயங்கள் காணப்படுவதாலும் வேறு சில தடயங்கள் இருப்பதாலும் இந்த யுவதியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனவிசாரணைகளின் பின்னர் தெரிவிக்கப்பட்டது. சடலம் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக