07 ஏப்ரல் 2011

அமெரிக்கா ஸ்ரீலங்காவிற்கு இடையில் முறுகல்!

பல தசாப்தங்களாக தொடர்ந்த விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவில் ஒரு முறுகல் நிலைக்கான சமிக்ஞைகள் தொடர்கின்றன. இலங்கையில் மனித உரிமை மற்றும் நல்லிணக்க நிலைவரங்களில் ஒரு உறுதியான முன்னேற்றம் காணப்படாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புக்களில் ஒரு மட்டுப்பாடு தேவைப்படும் என்று அமெரிக்க அரசுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரங்கள் கவலைக்குரியவை என்று அமெரிக்கக் காங்கிரஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின் வெளிவிவகாரக் குழுவின் முன்பாக விபரித்த அமெரிக்க அரசுத்துறையின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்காவுக்கு அதுகுறித்து மிகுந்த கரிசனை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் சில விடயங்கள் மிகவும் மோசமாக மாறிவருவதாகக் கூறிய அவர் ஜனநாயக நிறுவனங்கள் அங்கு பலவீனமடைந்து செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுப் போரை சிறிலங்கா அரசாங்கம் முடிபுக்குக் கொண்டுவந்த விதமானது அந்த அரசாங்கத்துடன் முழுமையாக ஈடுபாட்டுடன் இணைந்து செயற்படுவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கொல்லப்பட்டமை போன்றவை உட்பட சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் அங்கு மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பொறுப்பேற்றல் அவசியம். இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் அளவு குறுகியமை, தமிழர்கள் சிலரை பொலிஸ் படையில் சேர்த்தமை போன்றவை உட்பட நல்லிணக்கம் தொடர்பில் சில நல்ல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அது தொடர்பில் இன்னமும் நிறையச் செய்யப்படவேண்டியுள்ளது என்றும் பிளேக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தாம் பொறுப்பு அல்ல என்று வழமையாகவே மறுத்துவருவதுடன் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரும்வரை பொறுத்திருக்கமாறு விமர்சகர்களை கேட்டு வருகிறது. தேசிய மட்டத்திலான நல்லிணக்கம் ஒன்றை எட்டுவதற்கு சிறிலங்காவிற்கு அவகாசம் தரப்படவேண்டும் என்று தற்போது லண்டனில் இருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சரும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக