13 ஏப்ரல் 2011

நிபுணர் குழு அறிக்கை மகிந்தவிற்கும் அனுப்பி வைப்பு!

இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர் அடுத்து என்ன செய்வதென்று சில தினங்களில் தீர்மானிக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகம் பன் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்பு கூறுதல் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அவரால் கடந்த வருடம் மே மாதம் நியமிக்கப்பட்ட மூன்றுபேர் கொண்ட நிபுணர்கள் குழு தனது பணியை செப்டம்பர் மாதம் ஆரம்பித்திருந்தது.
ஸ்ரீலங்கா அரசின் கடும் எதிர்ப்புகள், அதிருப்திக்கு மத்தியில் இந்தக்குழு இலங்கைக்கு செல்லாமலே தனது ஆய்வுகளை மேற்கொண்டு செவ்வாயன்று தனது அறிக்கையை ஐநா செயலாளர் நாயகம் பன் கீ மூனிடம் கையளித்துள்ளது. இதன் ஒரு பிரதி ஸ்ரீலங்கா அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,
ஐநா சபையின் தலைமை அலுவலகத்தில் நிபுணர்கள் குழுவிடமிருந்து அறிக்கையைப் பெற்றுக்கொண்ட செயலாளர் நாயகம் பன் கீ மூன், நிபுணர்களின் பணிக்காகத் தமது நன்றியைத் தெரிவித்ததுடன், அறிக்கையை மிகவும் கவனமாக ஆராய்ந்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சில தினங்களில் முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக வகைகூறுதல் மற்றும் பொறுப்பு கூறுதல் தொடர்பாக கைக்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றி ஆராய்வதற்கும், இந்த வழிமுறைகளைச் செயற்படுத்துதல் தொடர்பில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய சர்வதேச மட்டத்திலான நடைமுறைகள், அது தொடர்பிலான வேறு அனுபவ முன்மாதிரிகள் தொடர்பான சிபாரிசுகளைத் தெரிவிப்பதற்குமாக மூவர் அடங்கிய இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருந்தது.
இந்தோநேசியாவைச் சேர்ந்த மர்சுக்கி தருஸ்மன் தலைமையில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் கடந்த வருடம் மே மாதம் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
முப்பது வருடங்களாகத் தொடர்ந்த இலங்கையின் இன முரண்பாட்டுப்போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த பின்னணியில் கடந்த 2009 ஆம் அண்டு மே மாதம் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து வெற்றியடைந்ததாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, போர்க்குற்றங்களிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்ததாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
யுத்தம் முடிவடைந்ததும் இலங்கைக்கு விஜயம் செய்த ஐநாவின் செயலாளர் நாயகம் பன் கீ மூன் யுத்தம் நடைபெற்ற பகுதிக்கு மேலாகப் பறந்து சென்று பார்வையிடுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த விஜயத்தின்போது ஐநா செயலாளர் நாயகத்திற்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் விடுக்கப்பட்ட இணை அறிக்கையின் தொடர்ச்சியாகவே நிபுணர்குழு நியமிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர், இறுதிக்கட்ட யுத்தமோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு ஐநா அதிகாரிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள், மற்றும் மனித உரிமைகள் அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் சுதந்திரமாகச் சென்று பார்வையிடுவதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றது.
இந்த நிலையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசு வகையும் பொறுப்பும் கூறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காகவே இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டது என்று ஐநா அறிவித்துள்ளது,
இந்தக் குழுவினர் இலங்கை சென்று நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்குரிய சந்தர்ப்பத்தை ஸ்ரீலங்கா அரசு வழங்காத நிலையில், அங்கு செல்லாமலே தனது ஆய்வுகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஐநா கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக