15 ஜனவரி 2011

இன்றைய பொங்கல் நாளில் இனிப்பு செய்தி சொல்கிறார் ஆனந்தசங்கரி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் என்ற தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய தமிழ் அரசியற் கட்சிகள் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஒரே அணியில் போட்டியிட இணங்கியிருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தைப்பொங்கள் தினத்தன்று தமிழ் மக்களுக்கான ஓர் இனிப்புச் செய்தியாக இது அமையும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஏனைய தமிழ் அரசியற் கட்சிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற தொடர் பேச்சுக்களின் முக்கிய கட்டப் பெச்சுவார்த்தையாக நேற்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் பேச்சுவாத்தை நடத்தியதாகவும் இதில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் உடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஈ.பீ.டீ.பீ, மற்றும் ரீஎம்வீபீ கட்சிகள் தவிர்ந்த ஏனைய முக்கிய தமிழ் அரசியற் கட்சிகள் ஒரே அணியில் ஒரேசின்னத்தில் போட்டியட தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று இலங்கை நேரம் பிற்பகல் 2 மணிக்கு முன்பாக கூட்டறிக்கை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுத்தம், இயற்கை அழிவு உள்ளிட்ட காரணிகளால் தாங்க முடியாத துயரங்களை எதிர் கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியற் கட்சிகளின் கூட்டிணைவு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என பரவலாக கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக