10 ஜனவரி 2011

இலட்சிய தாகம் கொண்டவர்களை ஒடுக்க முடியாது!

நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், ம.தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார். சுமார் 1 1/2 மணி நேரம் அவர் வைகோவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
தமிழ் ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழ விடுதலைக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடும் போராளி சீமான் மீது இரண்டு முறை தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டது. சிறைச் சாலைகளில் அடக்குமுறை. லட்சிய தாகம் கொண்டவர்களை ஒடுக்க முடியாது. சீமான் கைது செய்யப்பட்டதும் முதல் கண்டன அறிக்கை ம.தி.மு.க. கொடுத்தது.
சீமான் பேசிய அதே பேச்சை நான் தமிழ்நாடு முழுவதும் கூட்டங்களில் பேசினேன். அவர் பேச்சில் எந்த தவறும் இல்லை. வேலூர் சிறையில் நானும், நெடுமாறனும் சீமானை சந்தித்தோம். அப்போது எந்த தவறும் செய்யாமல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ஒரு கொலைக்காக 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் தம்பிகளையும் பார்த்தேன். சீமானை கைது செய்தது சட்டவிரோதம் என்று கோர்ட்டு விடுவித்துள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவது எங்கள் உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை பிடித்ததற்கு 1200 கோடி ரூபாய் செலவு செய்தும் கூட 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. வருகிற சட்டசபை தேர்தல் தமிழர்களின் தன்மானத்திற்கு விடும் அறை கூவல். தமிழ்நாட்டில்
பள்ளி குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. சுதந்திரமாக தொழில் செய்ய பாதுகாப்பு இல்லை. வரப்போகும் தேர்தலில் விலைவாசி உயர்வு, மணல் திருட்டு, வாழ்வாதார சீரழிவு பற்றி தெருத் தெருவாக பிரசாரம் செய்வோம்.
தேர்தல் களத்தை சந்திக்க சீமான் தயார். தேர்தல் களத்தை சந்திக்க வலுவான வஜ்ராயுதமாக சீமான் இருப்பார். கலையுலகில் இருக்கும் தமிழ் இன உணவாளர்களும் இணைந்து வெற்றியை ஈட்டுவார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக