08 ஜனவரி 2011

பத்தாண்டுக்குள் ஈழ விடுதலை நிச்சயம்!-செந்தமிழன் சீமான்.

நாடு கடந்த தமிழ் உறவுகளுக்கு தனி அமைச்சம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம், அக்கசியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய சீமான்,
பிரபாகரன் என் தலைவன். பிரபாகரன்தான் எங்கள் வழிகாட்டி. என் தாய் இனத்தை அழித்தவன் சிங்களவன். அதே தாய் மண்ணில் எங்கள் தாய் மண்ணை மீட்டெடுப்போம். 10 ஆண்டுக்குள் ஈழ விடுதலை நிச்சயம். ஈழ விடுதலைக்கு இந்த மண் என்ன செய்தது. எங்களை அழிக்கத்தான் முன்வந்தது. அதனால்தான் எங்கள் ஈழ விடுதலை தமிழ் தாயகம், தமிழ் ஈழம் எங்கள் தாகமாக உள்ளது. 16 கல் தொலைவில் உள்ளது என் தாய் மண். அதை மீட்டெடுக்க நான் செல்வதில் என்ன தவறு.
இதற்கு முன்பு தனி ஈழம் கிடைக்கச் செய்வோம் என்று சொல்லியவர்கள் புறம்தள்ளிவிட்டு ஓடிவிட்டார்கள். ஆனால் நாம் புலிக்கொடி என்ற தேசியக்கொடியை பறக்க விடுவோம். இந்த மண்ணில் பேச்சுக்கு, கருத்துக்கு சுதந்திரம் கிடையாது. சீமான் தங்க எங்கும் விடுதி கொடுக்கக் கூடாது என்கிறார்கள். நெய்வேலி மண்ணில் என்னை பேசவிடாமல் வாய்ப்பை மறுத்தார்கள்.
காங்கிரஸ் அதிமுக பாஜக மேடைகள் தவிர, என் இனம் காக்க ஒவ்வொரு கட்சி மேடையிலும் ஓடி ஓடி பேசினேன். கடைசியில் வென்று நின்று செத்தவனாகி விட்டேன். அதன்பிறகுதான் என் நாட்டைக் காக்க, என் இனம் காக்க, படை கட்ட திட்மிட்டு தம்பிகளை ஒன்றிணைத்து படை கட்டியிருக்கிறேன்.
லட்சக்கணக்கான கண்ணீரில்தான் இந்த படை கட்டப்பட்டு இருக்கிறது. சிங்களவன் என் தாய், தந்தையர்களின் உடல்களை பிளந்தான். இதைப் பார்த்து போராட யாரும் வரவில்லை என்றுதான், நாம் தமிழனை உருவாக்கினேன். மீனவனை அடித்தால் மாணவனை அடிப்பேன் என்று சொன்னதற்கு சிறைப்படுத்தினார்கள். இதற்கு நீதிபதி சொன்னார் சீமான் சொன்னதில் என்ன தவறு என்று.
என் சொந்தங்களை தட்டி எழுப்பத்தான். நெருப்பில் வெந்து செத்தான் முத்துக்குமார். இவனுக்காக என்ன செய்தார்கள் ஆட்சியாளர்கள். இனம் காக்க போராடியவர்களைத்தான் ஒடுக்கினீர்கள். ஈழ மண்ணில் சுதந்திரத்திற்காக போராடியவர்களை அங்கே செத்து மடிந்தவர்களை வெளியே தெரியாமல் மூடி மறைத்தீர்கள். ஊடகங்களில் வெளிவராமல் தடுத்தீர்கள். இதை பதிவை செய்து வீடு வீடாக கொடுத்த என் தம்பிகளை சிறைப்படுத்தினீர்கள். இதுதான் உங்களால் செய்ய முடிந்தது.
முதல்வன் படத்தைப் போல, என்னையும் ஒருநாள் முதல்வராக ஆக்கிப் பாருங்கள். எப்படி மாற்றி காட்டுகிறேன். இந்திய பேரரசே தமிழ் தேசிய இனம் எங்கள் இனம். அனைத்தையும் மாற்றி காட்ட என்னால் முடியும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக