30 ஜனவரி 2011

கருணாவுக்கு மரியாதையை செய்ய வைத்திருந்த மாலைகள் மறைந்தன!

ஸ்ரீலங்காவின் மீள்குடியேற்றத்துறை பிரதி அமைச்சர்(கருணா) விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பிகளான பொன்.செல்வராசா, சீனித்தம்பி யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர் இரா.துரைரட்ணம் ஆகியோருக்கு இன்று பொது நிகழ்வு ஒன்றில் அணியப்பட இருந்த மலர் மாலைகள் மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளன.
கிரான் குளத்தில் அமைந்திருக்கின்றது கதிரொளி அகரம் என்கிற அரச சார்பற்ற நிறுவனம். இதன் ஆறாவது ஆண்டு நிறைவு விழா காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. ஆனால் இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் (பிள்ளையான்) சிவநேசதுரை சந்திரகாந்தனோ, முதலமைச்சரின் பரிவாரத்தினரோ விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருக்கவில்லை.
இந்நிலையில் விருந்தினர்களுக்கு அணிகின்றமைக்காக ஏற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு மேடையில் பத்திரமாக வைக்கப்பட்டு இருந்த மலர் மாலைகள் மாயமாக மறைந்து போய் உள்ளன. அத்துடன் அங்கு வைக்கப்பட்டு இருந்த நிறைகுடங்களும் காணாமல் போய் உள்ளன. இருப்பினும் விழா ஏற்பாட்டாளர்கள் மாற்று வழிகளை கையாண்டு நிலைமையை ஒருவாறு சமாளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக