13 ஜனவரி 2011

தமிழனுக்கு சிங்களவன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி குண்டு!

தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா என்று மீனவர் பாண்டியன் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையில் இனி எடுக்கும் தீர்வு, நிரந்தர இறுதித் தீர்வாகத்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று கடலுக்கு ஒரு படகில் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற பொழுது எம் இனத்தை அழித்த சிங்களனின் கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் பாண்டியன் (வயது 19) என்ற மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் வாழ்வின் சுகம் அனுபவியாத தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அந்த உயிர் இன்று நம்மிடம் இல்லை. இதற்கு யார் பொறுப்பு? இதுவரை 540-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் இது போன்ற தாக்குதலைக் கண்டிக்கத் துப்பில்லாதவர்கள் தான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றனர். நம் எல்லைக்குள் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதை இலங்கை கடற்படையினர் முன்னிலும் வேகமாக இப்பொழுது தொடர்கின்றனர். இது யார் கொடுத்த தைரியம்?
இதனைத் தட்டிக்கேட்ட என்னை அடக்குமுறைச் சட்டமான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவிச் சிறையில் தள்ளினார் கருணாநிதி. ஆனால் சுடப்படுவதற்குக் காரணமான ராஜபக்‌ஷேவுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பினை கருணாநிதியின் மத்திய அரசு அளித்தது.
தமிழர்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறுகிறார். இப்பொழுது உயிரை இழந்து நிற்கும் பாண்டியன் குடும்பம் எப்படி மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட முடியும்? இதற்கு என்ன பதிலை முதல்வர் வைத்திருக்கிறார்?
ஒட்டு மொத்த இனத்தையும் அழித்தொழித்த சிங்கள ராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய இந்திய அரசு இப்பொழுது கூட்டுப் பயிற்சிக்கும் ஆயத்தமாகி வருகிறது. இது மீதமுள்ள தமிழனையும் அழிக்கவா? சிங்களனால் கொல்லப்பட்ட எம் மீனவன் பாண்டியனின் உடலில் பாய்ந்த குண்டினை பரிசோதித்துப் பார்த்தால் அது இந்திய ராணுவம் கொடுத்த குண்டாகத்தான் இருக்கும்.
தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு இந்த துப்பாக்கி தோட்டா ஆகும். இவ்வாறு நாட்டின் குடிமகன் உயிரைக் காப்பாற்ற வக்கில்லாத கருணாநிதியும் சிதம்பரமும் பதவியில் இருப்பது வெட்கக்கேடு.
இவ்வாறு தொடர்ச்சியாக கொல்லப்படும் மீனவர் பிரச்னையில் இன்றும் கருணாநிதி கடிதம் எழுதி பிரச்னையை ஊத்தி மூடப் போகிறாரா? முதலில் இறந்த பாண்டியன் குடும்பத்திற்கு 10 லட்சம் அளிக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் இனி எடுக்கும் தீர்வு நிரந்தர இறுதித் தீர்வாகத்தான் இருக்க வேண்டும்," என்று சீமான் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக