29 ஜனவரி 2011

சிறிலங்காவின் பொலிஸ்மா அதிபர் நீதிமன்றில் உறங்கியதால் பாதுகாப்பு வாபஸ்.

வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கில் பாதுகாப்புச் செயலாளர் சாட்சியமளிக்கையில் தூங்கிக்கொண்டிருந்த காரணத்தால் பொலிஸ் மா அதிபரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 25ம் திகதி வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கின் போது பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொழும்பு உயர்நீதிமன்றில் சாட்சியமளித்திருந்தார். அதன் போது அவருடன் முப்படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகளும் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.
அவ்வாறு வருகை தந்த பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய பாதுகாப்புச் செயலாளரின் சாட்சியமளிப்பின் போது நீதிமன்றில் தூங்கிக்கொண்டிருந்திருக்கின்றார். அவரை நீதிமன்றப் பதிவாளரே தட்டியெழுப்பியுள்ளார்.
அதனைக் கண்ணுற்றுக் கோபமடைந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உடனடியாக பொலிஸ் மா அதிபரின் பொறுப்பில் இருந்த விசேட அதிரடிப்படையை தன் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார்.
அதனையடுத்து இன்று தொடக்கம் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டு வந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பொலிசாரே இனி அவரின் பாதுகாப்பைப் பொறுப்பேற்கவுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புக்குப் பதிலாக பீல்ட் போர்ஸ் பொலிஸ் பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக