22 ஜனவரி 2011

புலிகளின் முக்கிய தளபதிகள் கனடாவிலாம்!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கனடாவுக்குத் தப்பி வந்துள்ளதாக அந்நாட்டின் உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அது பற்றிய செய்தியொன்றை இன்றைய திவயின சிங்கள நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதன் பாதுகாப்பு பத்தி எழுத்தாளராலேயே கனடா உளவுத்துறையை மேற்கோள் காட்டி இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பெரும்பாலான விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் கனடாவுக்குத் தப்பி வந்துள்ளதாக அந்நாட்டு உளவுத்துறை கண்டறிந்துள்ளது.
அவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து கனடாவில் விடுதலைப் புலிகளின் கேந்திர நிலையமொன்றை உருவாக்குவதற்கான திட்டங்களைத் தீட்டியுள்ளதுடன், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
அதற்கு மேலதிகமாக விடுதலைப் புலிகளின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தளபதிகள் மற்றும் உளவுப் பிரிவின் முக்கியஸ்தர்கள் என சுமார் ஐம்பது பேரடங்கிய குழுவொன்றும் கனடாவுக்கு வந்து சோ்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் குறித்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக