01 மார்ச் 2011

புலிகளின் ஆயுதம் ஊடகம் என்கிறார் ரூபசிங்க!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான ஆயுதமாக சில ஊடகங்கள் திகழ்கின்றன என ஓய்வு பெற்ற இராணுவ பிரிகேடியர் எச்.எப். ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், ஊடக ரீதியான பிரச்சாரங்களை தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஊடகங்கள் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களின் மூலம் ஈழக் கனவை நிறைவேற்றிக் கொள்ள சில சக்திகள் முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் பழி தீர்த்துக் கொள்ளும் நோக்கில் சில தரப்பினர் ஊடகங்களில் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கமும் புலனாய்வுப் பிரிவினரும் இவ்வாறான சக்திகள் குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை சீர் குலைப்பதற்கு சில சக்தகிள் ஆர்வம் காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச உள்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சில தனிப்பட்ட நபர்களும் இவ்வாறு செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் உயரதிகாரியும் பாதுகாப்பு பத்தி எழுத்தாளருமான கேணல் ஹரிகரனின் ஆக்கங்கள் புலிகளுக்கு சார்பான வகையில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் யுத்த முனைப்புக்களை பலவீனப்படுத்தும் வகையில் அவர் ஆக்கங்களை வெளியிட்டு வந்ததாக பிரிகேடியர் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக