10 மார்ச் 2011

தந்திரோபாய நடவடிக்கைகளுக்கே கே.பி.பயன்படுத்தப்படுகிறார்!

கே.பியை அரசு தற்போது இயக்குகின்ற விதம் அரசின் ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகும் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா நேற்றுக் கூறினார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பின்பேது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் இதுதொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,புலிகளின் முக்கியஸ்தரான கே.பி. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவர். அவருக்கு எதிராகக் கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அவரை இப்போது நிர்வகிக்கின்ற விதம் தொடர்பாக எவரும் கவலைகொள்ளவோ அல்லது பெரிதாக அலட்டிக்கொள்ளவோ தேவையில்லை.
சிக்கலான விடயங்களை வெற்றிகொள்வதற்கு விதவிதமான தந்திரோபாய நடவடிக்கைகள் கையாளப்படுவது வழமை. கே.பியை அரசு நடத்துகின்ற விதமும் அவ்வாறான தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒன்றுதான். புலிகள் இலங்கையில் ஒழிக்கப்பட்டபோதிலும் அவர்களின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் இடம்பெறுகின்றன. அவை தொடர்பாக நாம் மிகவும் கவனமாக இருக்கின்றோம்.
கே.பி. தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன. அந்த விசாரணைகளுக்கு நாம் இடம்கொடுக்கவேண்டும். விசாரணையின் பின் அவர் தொடர்பில் அரசு பிழையாகச் செயற்பட்டால் அப்போது நாம் இதுபற்றி பேசலாம். இப்போதைய செயற்பாடுகள் தொடர்பாக நாம் பேசாமல் இருப்பது நல்லது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக