19 மார்ச் 2011

பூமிக்கு அருகில் நிலா,மக்கள் பீதியடையத்தேவையில்லை!

இன்று சந்திரன் பூமிக்கு அருகில் வருவதால் மிகப் பெரிய அளவில் காட்சியளிப்பதைக் காணக் கூடியதாக இருக்கும். இவ்வாறு பூமிக்கு அருகில் வருவதால் தான், பூமியில் தற்போது பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன என்று பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பூமியை சந்திரன் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டப்பாதை இரு இடங்களில் பூமிக்கு நெருக்கமாக வரும். அந்தப் பகுதியில் சந்திரன் வரும் போது வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரியும்.
இன்று பூமியில் இருந்து மிகக் குறைந்த தொலைவான 3,56,577 கி.மீ., தொலைவில் சந்திரன் தோன்றும். அதனால், அது உருவ அளவில் சற்றுப் பெரிதாகவும், அதிக ஒளியுடையதாகவும் இருக்கும். கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின், இது போல சந்திரன் பூமியை நெருங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில், ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டது, சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால் தான் என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், இது வழக்கமான ஒன்று என்றும், இதனால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக