04 மார்ச் 2011

பொய்யுரைத்த மகிந்த சமரசிங்க!

ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து, வெளிநாட்டு தரப்பினரால் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு, ஸ்ரீலங்கா தரப்பில் கலந்து கொண்ட பிரதிநிதி மகிந்த சமரசிங்க எந்த பதில்களையும் முன்வைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் பல்வேறு மனித உரிமை நிலவரங்கள் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும், அது தொடர்பில் அவர் மௌனம் காத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த மாநாட்டின் போது அவர் வழங்கி இருந்த நீண்ட உரை, ராஜபக்ஷ அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மட்டுமே உள்ளடக்கி இருந்தது.
இதன் போது, மனித உரிமைகள், பயங்கரவாத தடை சட்டம், வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பதிவு நடவடிக்கைகள் குறித்த விளக்கம் மற்றும் ஊடக சுதந்திரம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாறாக இலங்கையில் 80 சதவீதமான அவசர கால சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக மாநாட்டில் வைத்து அவர் பொய் கூறியதாகவும், லங்கா நியூஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், 18ம் திருத்தச் சட்டத்தின் கீழ், மகிந்த ராஜபக்ச பெற்றுள்ள அதிகாரங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இலங்கையின் மனித உரிமைகள் மேம்பாடு குறித்து திருப்தி வெளியிட்டதாக மஹிந்த சமரசிங்க இலங்கைக்கு திரும்பிய பின்னர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக