21 மார்ச் 2011

தடுப்பு முகாம் போராளி நீதி வேண்டி தற்கொலை!

தனது இறப்பு மூலமாவது ஏனைய போராளிகளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வவுனியா பம்பைமடு தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்திருக்கின்றார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வன்னியின் இறுதிப் போரின் போது சரணடைந்திருந்த கிளிநொச்சி முழங்காவிலைச் சேர்ந்த நியூட்டன் என்ற போராளி வவுனியா பம்மை மடு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
குடும்பத்தில் பெண் பிள்ளைகள் உள்ளமையாலும் குடும்பத்தினைப் பார்ப்பதற்கு எவரும் இல்லை என்ற காரணத்தினாலும் தன்னையும் தன்னைப் போன்ற போராளிகளையும் விடுதலை செய்யுமாறும் தடுப்பு முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
இரண்டு ஆண்டுகளாகியும் எந்தவித பதிலும் வழங்கப்படாமையை அடுத்து இன்று அதிகாலை 5.00 மணியளவில் பம்பைமடு தடுப்பு முகாமில் உள்ள கிணற்றில் அவர் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.
தான் உயிரிழக்கப் போவதாகவும் தனது மரணம் மூலமாவது ஏனைய போராளிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாக தெரியவந்திருக்கின்றது.
குறித்த முன்னாள் போராளி அதிகாலை உயிரிழந்த போதிலும் இன்று முற்பகல் 11.00 மணியளவிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலத்தைப் பார்வையிடுவதற்கு மஹிந்த ராஜபக்சவின் இணைப்பாளர் சிவநாதன் கிசோர் உட்பட்டவர்கள் தடுப்பு முகாமிற்குச் சென்றிருந்ததாக தெரியவருகின்றது.
இதேவேளை பம்பைமடு தடுப்பு முகாமில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த மற்றொரு முன்னாள் போராளி ஒருவர் இன்று தப்பிச் சென்றிருப்பதாக பம்பைமடு தடுப்பு முகாம் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக