21 மார்ச் 2011

தேசத்தின் அன்னைக்கான நினைவு வணக்கம்!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சத்தில் போற்றிடும் அன்னை பார்வதி அம்மையார் 31-வது நினைவு நாளாகிய மார்ச் 22 அன்று, தமிழ் ஈழத்திலும், தரணியில் தமிழர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும், அன்னையாரின் அந்தியேட்டி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தலைநகர் சென்னையில், வங்கக்கடல் அலைகளில் மலர்களைத் தூவி நீர்க் கடன் ஆற்றும் நிகழ்ச்சி, பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற இருக்கிறது.
மாவீரர் திலகம் பிரபாகரனை தன் வயிற்றில் சுமந்த நமது அன்னை பார்வதி அம்மையாரின் ஈமச்சாம்பல், ஈழத்தில் இருந்து வந்து சேர்ந்து இருக்கிறது.
அதனை, வங்கக் கடலில் தூவிட இருக்கிறோம். அதே நேரத்தில், கடலுக்கு அப்பால் ஈழத்தில், கண்ணீர் கடலில் தத்தளிக்கும் தமிழ் ஈழ மக்களைப் பாதுகாத்து, அவர்கள் மானத்தோடும், உரிமையோடும் வாழ, அவர்களின் தாயக மண்ணை மீட்டெடுத்து, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைத்திட, அன்னை பார்வதி அம்மையாரின் நினைவாக வீர சபதம் ஏற்போம்.
எனவே, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணிக்கு பத்தினித்தெய்வம் கண்ணகி சிலை அருகில், தமிழ் ஈழ உணர்வாளர்கள் அனைவரும் வருகை தந்து, நம் அன்னையின் புகழ் அஞ்சலியில் பங்கு ஏற்குமாறு அன்போடு வேண்டுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக