19 ஜூன் 2011

முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து துணை நிற்போம்.

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.
ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், பேராசிரியர் தீரன், அற்புதம்மாள், கலைக்கோட்டுதயம், அன்புதென்னரசு, கோட்டைகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அய்யநாதன் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இலங்கையில் தமிழினத்தை அழித்த அதிபர் ராஜபக்சே உள்ளிட்டவர்களை போர்க்குற்றவாளிகள் என அறிவிக்குமாறும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, அதனடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து வழங்கிய மனுவிலும் அந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே ராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுமாறு முதல்வருக்கு வலியுறுத்துகிறோம். சமீபத்தில் முதல்வரை சந்தித்துவிட்டு கொழும்பு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் ஐ.நா. குழுவின் அறிக்கை குறித்து கருத்து கேட்டதற்கு, “ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எந்த ஒரு நாட்டையும் தனிமைப்படுத்தி கண்டனம் செய்ய இந்தியா அனுமதிக்காது” என்று கூறியுள்ளார்.
இதற்கு இலங்கை அரசை தனிமைப்படுத்த மாட்டோம் என்பதே பொருள். எனவே மத்திய அரசு இலங்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது தெளிவாகியுள்ளது. இலங்கைக்கு எதிராக மற்ற மாநில அரசுகளின் தலைவர்களிடமும், இந்தியாவின் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் பேசி, இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை தீர்மானத்தை நிறைவேற்றுமாறு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.
தூத்துக்குடி – கொழும்பு இடையிலான கப்பல் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியதற்காகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழினம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. பொருளாதார புறக்கணிப்பை முன்னெடுக்கும் வகையில் இலங்கை பொருட்களை புறக்கணிப்போம், தமிழக வணிகர்கள் யாரும் அந்நாட்டுடன் வணிகம் செய்யக்கூடாது, இலங்கை விமான சேவையை புறக்கணிப்போம், தமிழ் திரைத்துறை மட்டுமின்றி, இந்திய திரைப்பட கலைஞர்களும் இலங்கை செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்த நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துள்ளது.
இதற்காக முதல்-அமைச்சரும் பொதுவானதொரு வேண்டுகோள் விடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்பதற்கான முயற்சியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் வரவேற்கிறோம். அதோடு, இருநாடுகளுக்கிடையேயான கடற்பகுதியில் எவ்வித தடையுமின்றி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையேல் இந்திய – இலங்கை கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தையே ரத்து செய்வது தான் சரியானதாக இருக்கும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு முன்வைக்கிறோம்.
தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களை கண்காணிப்பது அவசியம் என கருதினால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி ஈழத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்கியிருக்குமாறு கட்டளையிடலாம். உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தோல்வியை பொறுக்க முடியாமல் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சித்ரவதை செய்து படுகொலை செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இந்திய நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.
இதே நிலை நீடித்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுகதான் கைப்பற்றும் என்பது நிச்சயம்.
காங்கிரஸ் கட்சியின் தயவு அதிமுகவுக்குத் தேவையில்லை. அதிமுகவின் தயவுதான் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை. எனவே அதிமுக ஒருபோதும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்றார்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடங்கியதும் சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து விட்டுவிட்டு சிறிது நேரம் மழை பெய்தது. ஆனாலும் கூட்டத்தினர் கலையாமல் இறுதி வரை காத்திருந்து சீமான் பேச்சை கேட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக