11 ஜூன் 2011

கனடிய பாராளுமன்றில் தமிழிலும் கன்னியுரை ஆற்றினார் ராதிகா.(காணொளி இணைப்பு)

கனடாவின் முதலாவது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் பாராளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சினைத் தமிழிலும் நிகழ்த்தினார்.
முதல்முறையாக கனேடிய பாராளுமன்றிற்குத் தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் ராதிகா சிற்சபைஈசன் தனது முதலாவது பாராளுமன்ற கன்னி உரையை தமிழ் மொழியிலும் நிகழ்த்தியுள்ளார்.
அவர் தனது உரையில், “அடுத்து கனேடிய பாராளுமன்றத்தின் முதன்முதலாவது தமிழ் உறுப்பினர் என்ற வகையிலேயே இந்த மதிப்பிற்குரிய அவையிலேயே எனது தாய் மொழியில் பேச முடிவதையிட்டு ஒருங்கே பெருமையாகவும் எளிமையாகவும் உணர்கிறேன். தமிழர்களாகிய நாம் பெரும்பாலும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் போர்ச் சூழலில் இருந்தும் தப்பித்தே கனடாவிற்கு வந்திருக்கிறோம்.
கனடா எங்களை இருகரம் கொண்டு அரவணைத்தது. நாமும் இந்தப் பெருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளத்திற்கும் முனைப்போடு பங்களித்து வருகிறோம். இன்று இந்த அவையிலே தமிழ் பேசப்பட்டதை அப்படி ஒரு மைல்கல் எம்மால் எட்டப்பட்டதை அறிந்து ஸ்காப்ரோ ரூஸ் ரிவரிலும் டொரொண்டோ பெரும்பாகத்திலும் ஏன் உலகெங்குமே பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயமாக பெருமையடைவார்கள்.
கனடாவில் எமது சமூகத்தின் வளர்ச்சியின் அடுத்தப் படி இது. தமிழர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் தடைகள் தகரும் அவர்கள் கனடாவின் உயர்தலைமை பொறுப்புக்களை நோக்கி முன்னேறுவார்கள்.” என்று உரையாற்றினார்.
எனினும் ஈழத் தமிழர்கள் குறித்தும் ஐநா அறிக்கை குறித்தும் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் இருந்தது கவலைக்குரியதே. ஆயினும் கன்னி உரை என்பதால் அவர் அதனை தவிர்த்தாரோ என்னவோ தெரியவில்லை. அடுத்தடுத்த உரைகளில் ஈழத்தமிழர்கள் சார்பிலும் குரல்கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக