02 அக்டோபர் 2011

விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட போராளிகள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை!

புனர்வாழ்வுப் பயிற்சிகளின் பின்னர் இலங்கை ஜனாதிபதியால் வெள்ளியன்று பெற்றோரிடம் கையளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை தம்முடன் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று அவர்களது பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்படுவதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்திருந்த, 1800 பேர் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் வைபவரீதியாக விடுதலை செய்யய்பட்டிருந்தார்கள்.
இருப்பினும், விடுதலை செய்யப்பட்ட எவரையுமே பெற்றோர்களுடன் வீடுகளுக்குச் செல்வதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியிடமிருந்து தமது பிள்ளைகளைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக, வவுனியாவில் இருந்து இந்த வைபவத்திற்கென கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த 30 பெற்றோர்கள் இதனால் பெரும் ஏமாற்றத்துடன் தமது வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
கொழும்பில் நடைபெற்ற வைபவத்தில் 1800 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்ததாகவும், விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட அனைவரும் ஒக்டோபர் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் வைத்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மூத்த ஆலோசகர் சிவலிங்கம் சதீஸ்குமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.
புனர்வாழ்வு நிலையங்களில் பயற்சி பெற்றுள்ளவர்களுக்கு சட்ட ஆவணங்களாக மருத்துவ சான்றிதழ் உட்பட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும், அடுத்த இரண்டு தினங்களில் இந்தச் சான்றிதழ்கள் உரிய அதிகாரிகளினால் தயார் செய்யப்பட்டு விடுதலை செய்யப்படவுள்ளவர்களுக்கு வழங்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
நன்றி – பிபிசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக