25 அக்டோபர் 2011

அரசின் அனுமதியின்றி மகிந்தவிற்கு எதிராக வழக்கு தொடர முடியாதென அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவிப்பு!

மத்திய அரசின் அனுமதியின்றி இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தொடர முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.இலங்கையில் பிறந்த அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்ற நபர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக மெல்பேர்ன் நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பொது நலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பேர்த் சென்றுள்ள நிலையில் இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியின்றி அவ்வாறு வழக்குத் தொடர முடியாதென அவுஸ்திரேலிய பிரதமர் இன்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி எதுவும் செய்ய முடியாதென அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபருக்கு இவ்வழக்குத் தொடர்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்,
எனினும் இதுகுறித்து சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன்டின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கேதீஸ்வரனின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இருந்த போதும் இந்த வழக்கு குறித்த எந்த ஆவணமும் தமக்குக் கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன்டின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பிராந்திய பொலிஸார் இது தொடர்பில் அறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து கவலையடைவதாகக் கூறிய அவுஸ்திரேலிய பிரதமர் போர் குற்ற விசாரணைக்கு வலியுறுத்திவது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக