12 அக்டோபர் 2011

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இலங்கையின் கொலைக்களம் காணொளி இன்று வெளியிடப்படுகிறது!

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படம் இன்று காட்சிப்படுத்தப்படவுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று நண்பகல் ஒரு மணிக்கு இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்படுவதைத் தொடர்ந்து குழுநிலை விவாதமும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய அரச சார்பற்ற மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தபடவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரம் வரையிலான பொதுமக்களின் படுகொலைகளைத் தடுப்பதில் சர்வதேச சமூகம் தவறியமை குறித்து பாரதூரமான கேள்விகளை இந்த ஆவணப்படம் எழுப்புவதாக இந்நிகழ்வு குறித்து வெளியிடப்பட்ட அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நியூசிலாந்து, நோர்வே ஆகிய நாடாளுமன்றங்களில் ஏற்கெனவே காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அத்துடன் நியூயோர்க்கிலும் ஜெனிவாவிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகங்களிலும் இந்த ஆவணப் படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் தொலைக்காட்சி சேவைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இந்த ஆவணப்படத்திற்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு தயாரித்த ‘லைஸ் அக்ரி அப்போன்’ எனும் வீடியோ இன்று மாலை 5மணிக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் அலுவலகம் அமைந்திருக்கும் போர்ட்கல்லிஸ் ஹவுஸில் ஒளிபரப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் அரசாங்கத்தின் தரப்பில் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக