14 அக்டோபர் 2011

மகிந்தவிற்கெதிரான அழைப்பாணை தமிழ் நெற்றில் போட நீதிமன்று உத்தரவு!

அமெரிக்காவில் மகிந்தர் மீது போடப்பட்ட வெவ்வேறு வழக்குகள் இருக்கிறது. இதில் சட்டவல்லுனராகச் செயல்படும் திரு புரூஸ் பெஃயின் அவர்கள் தொடுத்த வழக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மகிந்தருக்கு எதிராக டாக்ட்டர் காசிப்பிள்ளை மனோகரன் என்பவர் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார். இவ்வழக்கிற்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மகிந்தர் மறுத்து, அனுப்பப்பட்ட அனைத்து கடிதங்களையும் வழமைபோல திருப்பி அனுப்பியது அலரி மாளிகை. எனவே இந்த அழைப்பாணையை அவருக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது அமெரிக்க சட்டவரைபில் குற்றஞ்சாட்டப்பட்டவர் இந்த வழக்கு குறித்து நிச்சயம் அறிந்திருக்கவேண்டும் என்பது அவசியமாகும்.
அழைப்பாணையை அனுப்புவதன் மூலமோ இல்லை கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலமோ குற்றஞ்சாட்டப்படும் நபர் தனக்கு எதிராக நீதிமன்றில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதை அறியவேண்டும். எனவே தற்போது சட்ட வல்லுனரான திரு புரூஸ் பெஃயின் அவர்கள் இலங்கையில் இருந்து வெளிவரும் 2 பத்திரிகையில் முதல் பக்கத்தில் மகிந்தருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள அழைப்பாணையை விளம்பரமாக பிரசுரிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாது நீதிமன்ற அனுமதியோடு அதனை தமிழ் நெட் இணையத்திலும் பிரசுரிக்க அவர் ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உத்தரவை வழங்கியுள்ளது.
எனவே மகிந்தருக்கு எதிரான அழைப்பாணையை தமிழ் நெட் இணையமும் இலங்கையில் இருந்து வெளியாகும் 2 பத்திரிகைகளும் பிரசுரிக்கின்றன. இதன் மூலம் மகிந்தருக்கு உத்தியோகபூர்வமாக அவர் மேல் அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற செய்தி சென்றடையும் என நம்பப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மகிந்தர் தனது பக்க நிலையை தெளிவுபடுத்தவேண்டிய கட்டாயம் தோன்றும். அதற்குமேலும் அவர் மெளனமாக இருக்க முடியாது. அப்படி அவர் இருந்தால் மேற்கொண்டு பல பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். திறமையாக வாதாடியும் பல வித்தியாசமான கோணங்களில் சிந்தித்தும் இந்த வழக்கை திறம்பட நகர்த்திவரும் சட்டவல்லுனர் திரு புரூஸ் பெஃயின் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக