28 அக்டோபர் 2011

அமெரிக்காவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னுதாரணம் இல்லாத வகையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள் உலகின் பல தரப்பாலும் வியப்போடும் விழிப்போடும் நோக்கப்படுகிறது.பிரதான இராஜதந்திரிகள், நாட்டின் பிரதிநிதிகளையே ஓரிரு மணித்தியாலங்கள் சந்தித்துப் பேசுகிற பாங்கையுடைய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தொடர்ச்சியாக மூன்று நாட்களாக சந்திப்பை மேற்கொண்டு வருகிறது.
புதன்கிழமை ஆரம்பித்த இந் சந்திப்புக்கள் நேற்று வியாளக்கிழமையும் மாலை வரை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளது.
இதுவரை நடந்த சந்திப்புக்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவும், பயன்தருவனவாகவும் அமைந்தன என்பதை பூடகமாகத் தெரிவித்த பேச்சுக்குழுவினர் நாளை பேச்சுக்கள் முடிந்ததும் மக்களிற்கு அறிக்கை வாயிலாக தங்களின் பேச்சுக்களின் விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் முடிவெடுக்கும் தலைமையகமான இராஜாங்கத் திணைக்களம் ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பான கற்கை, சமகால நிலவரப் பரிமாற்றம் என்பவற்றை மேற்கொண்டு இலங்கை தொடர்பான கொள்கை மாற்றமொன்றிற்குள் தன்னை கொண்டு செல்வதான ஐயப்பாடே நீண்டு செல்லும் பேச்சுக்களினால் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.
இதேவேளை ஐ.நா.வின் செயலர் பான் கீ மூனுடன் சந்திப்புக்கான சாத்தியம் நவம்பர் 1ம் திகதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் கனடாவிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்து சேரும் தமிழ்த் தேசியக் குழுவினர் மீண்டும் அமெரிக்கா செல்லும் சாத்தியம் காணப்படுகிறது.
கனடியத் தலைநகர் ஒட்டாவாவில் வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்திப்புக்களில் ஒக்டோபர் 31ம் திகதி மேற்கொள்ளும் இக் குழுவினர் அதன் பிற்பாடு மீண்டும் அமெரிக்கா செல்லலாம் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தென்னாசிய மற்றும் மத்திய ஆசியப்பிரிவுப் துணைச் செயலாராக ரொபேட் பிளேக் அவர்கள் இருக்கும் காலமே தமிழர்களிற்கும் அமெரிக்காவும் புரிந்துணர்வு ஏற்பட்ட காலமாக மாறும் வாய்ப்புள்ளதையே தற்போதைய சந்திப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ரொபேட் பிளேக் அவர்கள் சென்னையிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றிய காலம் தொட்டுத் தமிழர்களின் வாழ்வியலை அறிந்தவராகவும் தமிழ்மொழியை ஓரளவு அறிந்தவராகவும் இருந்தவர் என்பதும் இலங்கையில் விடுதலைப் போர் உச்சத்திலிருந்த போது தூதுவராகப் பணிபுரிந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கிளாரி கிளிண்டனின் அண்மைய இந்திய விஜயத்தின் போது அவர் சென்னை சென்று ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கும் ரொபேட் பிளேக்கே காரணம் என்று கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக