14 மே 2010

குழந்தையுடன் கடத்தப்பட்ட பெண் வானில் இருந்து குதித்து தப்பினார்!



சாவகச்சேரியில் இருந்து 3 வயதுக் குழந்தையுடன் வான் ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட பெண் சாதுரியமாகச் செயற்பட்டதனால் பரந்தனில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
சாவகச்சேரி சிவன் கோயிலடியைச் சேர்ந்த சந்திரசேகரம் தர்சினி (வயது 28) என்பவருக்கே இந்த அவலநிலை ஏற்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக அப்பெண் தெரிவித்தவை வருமாறு:
நேற்று முற்பகல் 11 மணியளவில் எனது 3 வயதுக் குழந்தையுடன் சாவகச்சேரி ஆஸ்பத்திரியை நோக்கி நடந்து சென்றேன். அவ்வேளை ஆஸ்பத்திரிக்கு சமீபமாக நின்ற வானில் இருந்த நால்வர் எனது வாய்க்குள் துணியை அடைத்து விட்டு என்னையும் குழந்தையும் வானில் ஏற்றிக்கொண்டு கிளிநொச்சிப் பக்கம் சென்றனர். வாய்க்குள் துணியை அடைத்ததால் என்னால் சத்தம் போடமுடிய வில்லை.
பரந்தன் சந்தியில் வான் நிறுத்தப்பட்டு அவர்கள் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது, குழந்தையை வான் யன்னல் ஊடாக சாதுரியமாக வெளியே போட்டு விட்டேன். பின்னர் வான் புறப்பட தயாரான போது கதவு வழியே வெளியே நானும் பாய்ந்து விட்டேன்.
என்னை ஏற்றிச்சென்றவர்களில் மூவர் சிங்களத்திலும் ஒருவர் மட்டுமே தமிழிலும் உரையாடினர்.
அங்கு சனங்கள் கூடிவிட்டதால் அப்படியே என்னையும் குழந்தையையும் விட்டு விட்டு வான் சென்றுவிட்டது.
ஒருவாறு எழுந்து பஸ்ஸில் குழந்தையுடன் சாவகச்சேரி வந்தடைந்தேன் என்றார்.
குழந்தைக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இரு கால்களிலும் உரசல் காயங்களுக்கு உள்ளான தர்சினி என்ற அந்தப் பெண் சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக