31 மே 2010

கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது!




கிளிநொச்சி கணேசபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் மீள் குடியமர்த்தப்பட்டிருந்தனர். அங்குள்ள ஒரு வீட்டு உறுப்பினர்கள், தமது வீட்டைப் புனரமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியபோது, மலசலக் கூடக் குழிக்குள் பிளாஸ்டிக் பைக்குள் அடைக்கப்பட்ட பல சடலங்களை கடந்த சனிக்கிழமை கண்டுள்ளனர். இதையடுத்து செய்தி கிளிநொச்சி குற்றவியல் நீதிபதிக்குச் செல்ல, அவர் குறித்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் இவற்றை இன்று திங்கட்கிழமை வவுனியா அரச மருத்துவமனையில் மருத்துவ அதிகாரி முன்னிலையில் வெளியே எடுக்கும்படி பணித்தார். எனவே அவை இன்று வெளியே எடுக்கப்படவுள்ளன. வீட்டுக்காரர்கள் தாம் ஐந்து சடலங்களைக் கண்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் மேலும் பல சடலங்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இதேவேளை அவ்வீட்டுக்குச் சென்று பார்வையிட்ட கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் இதுகுறித்துக் கருத்துக் கூறும்போது, இந்தக் கொலைகள் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டார். இந்தச் சடலங்கள் இருபடையாலான பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு, கற்கள், மணல் நிரப்பட்டு தாழ்க்கப்பட்டுள்ளன. எனவே இதைச் செய்ய கணிசமான நேரம் எடுத்திருக்கும் எனச் சுட்டிக்காட்டிய அவர் இக்கொலைகள் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளன என்றார்.புதைக்கப்பட்ட இச் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது அங்கு வந்த காவல்துறையினர், புகைப்படம் எடுக்க எவரையும் அனுமதிக்கவில்லை. அத்தோடு ஏற்கனவே கையடக்கத் தொலைபேசியில் எடுத்த சில புகைப்படங்களையும், சோதனையிட்டு அதனை அழித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக