11 மே 2010

நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையை ஏற்று செயற்படுக,ஜெயானந்த மூர்த்திக்கு ஒருமடல்.-சேரமான்.


தமிழீழத்தின் மீன்பாடும் தேனாட்டின் மைந்தனே!

சிங்கத்தின் நாடாளுமன்றக் குகையில் நின்று சீறிய சிறுத்தையே!

வணக்கம்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் வடமேற்கு இலண்டனில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நீங்கள் வெற்றியீட்டிய செய்திகேட்டு அகமகிழ்ந்தோம்.

அதற்கு மேலாக தமிழீழ மக்களின் விடிவிற்காக அயராது உழைப்பதற்கு திடசங்கற்பம்பூண்டு நீங்கள் விடுத்த அறிக்கை கண்டு உள்ளம் பூரித்தோம்.

தமிழீழ தேசியம் என்ற பாசறையில் வளர்ந்த சிறுத்தை நீங்கள். கருணா என்ற பெயரில் பிரதேசவாதப் பூதம் கிளம்பிய பொழுது அதனை எதிர்த்து மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களோடு தோள்கொடுத்துக் கிளர்ந்தவர் நீங்கள்.

தமிழீழ தேசியத்தின்பால் நின்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் சந்தித்த சோதனைகளுக்கு கையெறி குண்டுகளால் தகர்க்கப்பட்ட உங்கள் வீட்டின் கற்களே சாட்சி. உங்கள் முற்றமே ஆவணம். விடுதலைக்காக உடன்பிறப்பை உயிர்ப்பலியாகப் பறிகொடுத்தவர் நீங்கள். மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட உங்களுக்கு விடுதலையின் விலை நன்கு தெரியும்.

அதை நியூயோர்க்கின் உப்பரிகை மாளிகையில் ஒய்யாரமாய் சஞ்சாரம் செய்பவர்களால் விளக்கிவிட முடியாது என்பது உண்மைதான். அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதும் மெய்மைதான்.

நிற்க:

உங்களின் தலைமையில் களமிறங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளர்களிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கிட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரியதே: ஆரோக்கியமானதும் கூடவே.

இருந்தாலும் ஒரு நெருடல்: தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் கைகளில் கிட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சிதறடிப்பதில் இந்திய - சிங்கள அரசுகள் கங்கணம் கட்டிநிற்கும் வேளையில்...

அதற்கு உடந்தையாக நியூயோர்க் மதியுரைக் குழுக்களும், தேர்தல் ஆணையங்களும் கச்சையை வரிந்துகட்டிக் கொண்டு நிற்கையில்...

தமிழீழ தேசத்தின் எழுச்சியை மழுங்கடித்து தேர்தல் திருவிழாக்களுக்குள் ஈழத்தமிழர்களை மூழ்கடிப்பதில் இந்திய - சிங்கள அரசுகளின் கைக்கூலிகள் முழுமூச்சாய் சதிசெய்யும் இத்தருணத்தில்...

எவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படப் போகின்றது?

தேர்தல் மோசடி என்று பூச்சாண்டி காட்டி தமது கைக்கூலிகளை ஆசனங்களில் அமர்த்துவதில் நியூயோர்க் மதியுரைக் குழுக்கள் முற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணைப்பாளர் என்று கூறியவர் திடீரென வேட்பாளராக மாறிய சூட்சுமமும் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

போர்ஓய்வுக் காலத்தில் வன்னிக்குச் செல்ல மறுத்து முந்தானைக்குள் ஒளிந்துகொண்டவர்களும், தேர்தல் முடிந்ததும் இணைப்பாளர் பதவியில் இருந்து விலகி மக்கள் பிரதிநிதிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை ஒப்படைக்கப் போவதாகக் கூறியவர்களும் திடீரென ஆசனங்களுக்காக அடிதடிச் சண்டியர்களின் துணையை நாடியிருப்பதும் உங்கள் காதுகளை எட்டியிருக்கும்.

இலண்டனில் குண்டர்களைக் களமிறக்கி தமிழ்த் தேசிய உணர்வாளர்களை நியூயோர்க் மதியுரைக் குழுக்கள் மிரட்டுவதையும் நீங்கள் கேள்வியுற்றிருப்பீர்கள்.

வளைந்துபோன ஜனகர்களும், ஒதுங்கிக் கிடந்த உருத்திரபதிகளின் புத்திரசிகாமணிகளும் திடீரென ஆசனங்களுக்காக தாவித் திரிவதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.

உங்கள் தலைமையில் தேர்தலில் களமிறங்கிய மருத்துவர் என்.எஸ்.மூர்த்தி ஐயாவும், உங்களோடு தோளோடு தோள் நின்ற மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் புதல்வர் டேவிட் பரராஜசிங்கமும் இலண்டன் ரவுடிகளால் மிரட்டப்பட்டு தேர்தலில் இருந்து பின்வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட செய்தியும் உங்கள் காதுகளை வந்தடைந்திருக்கும்.

இதே கதி பிரான்சிலும், கனடாவிலும் நிகழ்ந்தேறுவதையும் நீங்கள் நிச்சயம் அறிந்தேயிருப்பீர்கள்.

தேர்தல் ஆணையம் என்ற பெயரில் நியூயோர்க் மதியுரைக் குழுக்கள் அரங்கேற்றும் தில்லு முல்லுகளால் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருவிலேயே கலைந்து போகும் நிலை காணப்படுவதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இலண்டனில் அல்லது ஜெனீவாவில் நிகழ்ந்தேற வேண்டிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வு அமெரிக்காவிற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதன் சூட்சுமமும் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

ஒருபுறம் அமெரிக்கா செல்வதற்கான பயண நுழைவனுமதி: மறுபுறம் அமெரிக்கப் பேரரசின் பயங்கரவாதச் சட்டம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அங்கீகரிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே அமெரிக்கப் பேரரசு பகிரங்கமாக அறிவித்து விட்டது. அப்படியிருக்க தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அமெரிக்கா செல்வது சத்திய சோதனை என்று நன்கு அறிந்திருந்தும் - தெரிந்திருந்தும், திட்டமிட்டு இறுதிநேரத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வின் நிகழ்விடத்தை நியூயோர்க் மதியுரைக் குழுக்கள் மாற்றியிருப்பதன் சூட்சுமத்தை புரிவது ஒன்றும் விண்வெளி விஞ்ஞானம் கற்பது அல்ல.

இரண்டு வாக்குகளால் வெற்றிபெற்ற ஒரு அப்புக்காத்துக்காக பல்லாயிரம் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அலைக்கழிக்கப்படுவதன் நியாயத்தைப் புரிந்து கொள்வது கடினமானதும் அல்ல.

தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் களமிறக்கமே இவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் பொழுது, இவர்களின் அடிப்படை நிகழ்ச்சி நிரலை வெள்ளிடை மலையாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.

தமிழீழத் தேசியக் கொடியைக் கைவிட்டவர்கள்... தமிழீழ தாயகத்தை மதரீதியில் துண்டாட முற்பட்டவர்கள்... சூரியத்தேவனுக்கு சவால் விடுப்பவர்கள்... இவர்கள்தான். இவர்களேதான்.

சனநாயகம் பணநாயகமாகியது இந்தியாவில். இன்று சனநாயகம் குண்டர்நாயகமாவது இந்த நியூயோர்க் மதியுரைக் குழுக்களின் வழிநடத்தலில்.

ஓராண்டாக மாயமானை ஏவி உலகத் தமிழினத்தின் மீது சவாரி செய்த இவர்களின் ஏமாற்று வித்தைகளை இனியும் அனுமதிப்பது நீதிக்கு ஆகாது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெயரில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் சிதறடிக்கப்படுவதை இனியும் நாம் அனுமதிக்கவும் முடியாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் இதனை இனியும் அனுமதிக்கவும் கூடாது.

மட்டுநகரின் சிறுத்தையே!

சூரியத்தேவனின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் உங்களின் பின்னால் தமிழ்த் தேசிய உணர்வாளர் குழாம் அணிநிற்கின்றது.

இனியும் காலம்தாழ்த்தாது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தலைமையேற்று வழிநடத்துவதே உங்கள் முன் இருக்கக்கூடிய ஒரேதெரிவு.

சிங்கள ஆட்சியாளர்களையும் அதன் படைகளையும் போர்க்குற்றவாளிகளாக உலக அரங்கில் நிறுத்துவதும், தமிழீழ தாயகத்தில் எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவம், தமிழீழத் தனியரசுக்கான வாக்கெடுப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதும், உங்களின் தலைமையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களின் பணி: கடப்பாடும் கூட!

தயக்கம் வேண்டாம்.

உரிமையுடன் அழைக்கின்றோம்.

விரைந்து செயற்படுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக