15 மே 2010

கொழும்பில் கடத்தப்பட்டவர்கள் தலை,கால்,கை,உடல் என்பன வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டார்கள்!


சிறீலங்காவின் தற்போதைய அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் மட்டும் 600 இற்கு மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாகவும், கடத்தப்பட்டவர்களின் தலை, கை, கால், உடல் என்பன வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டதாகவும். லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொட தொடர்பாக அது வெளியிட்டுள்ள பத்தியின் முக்கிய பகுதிகள் வருமாறு:
மகிந்தாவின் ஆட்சிக்காலத்தில் தான் அதிகளவான மக்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்களின் எண்ணிக்கை தெரிந்தால் அது மட்டும் தான் ஆதாரம்.
கொழும்பில் மட்டும் 600 பேர் காணாமல்போயுள்ளனர். அவ்வாறானால் முழு நாட்டிலும் எத்தனைபேர்? எமது தளத்தில் காணாமல்போனவர்களின் விபரங்களும், அவர்கள் காணாமல்போன சம்பவங்களும் பட்டியலிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தன.
தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த 600 பேர் காணாமல் போனபோது அவர்கள் விடுதலைப்புலிகள் என சிங்கள மக்கள் நம்பினார்கள். அவ்வாறானால் 600 விடுதலைப்புலிகள் கொழும்பில் இருந்தனரா? அண்ணளவாக விடுதலைப்புலிகளின் 24 பிளட்டூன் படையணிகள் கொழும்பில் தங்கியிருந்தனவா?
அவர்களால் கொழும்பில் ஏன் எதனையும் செய்யமுடியவில்லை? இது முழுமையான பொய். காணாமல்போனவர்களில் பலர் அப்பாவி இளைஞர்கள். பல குழுக்கள் ஆட்களை கடத்தி கப்பமாக பணத்தை பெற்றிருந்தனர். ஒரு கடற்படை அதிகாரி அதில் முக்கிய பங்கை வகித்திருந்தார்.
அவர் எனது நண்பர் ஒருவருக்கு சில தகவல்களை கூறியிருந்தார். அவர் கூறிய தகவல்கள் வருமாறு:
நாம் ஒருவரை கடத்தியதும் அவரின் செல்லிடபேசியில் உள்ள முதல் 10 தொலைபேசி இலககங்களுக்கு சொந்தமானவர்களை கடத்துவோம், பின்னர் அவர்களின் செல்லிடப்பேசிகளில் உள்ள முதல் 10 தொலைபேசி இலக்கங்களின் சொந்தக்காரர்களை கடத்துவோம்.
இவ்வாறு கடத்தல் பல மடங்காக அதிகரிக்கும். அதனை நாம் வெள்ளை வான் மூலமே மேற்கொண்டிருந்தோம். அவ்வாறு கடத்தப்பட்டவர்கள் யாரும் வீடு திரும்பியது கிடையாது. றிச்சார்ட் செய்சாவின் உடல் கண்டறியப்பட்டதை போன்ற தவறுகளை மறைப்பதற்காக நாம் புதிய முறைகளை பின்பற்றினோம் என தெரிவித்திருந்தார்.
கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குமார் ரூபசிங்காவுடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் உதவியாக இருந்தது. கடத்தப்பட்டவர்களின் தலை, கை, கால், உடல் என்பன வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டதாக நாம் அறிந்தோம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் உடல் கரையொதுங்க மாட்டாது.
போர் நடைபெற்ற காலத்தில் எமது ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொட தனது நண்பர் ஒருவரை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். அவருக்கு அருகில் கடற்படை சிப்பாய் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரின் மனைவி தனது அழுகையின் ஊடாக சில தகவல்களையும் புலம்பினார். கொல்லப்பட்டவர்களின் சடலங்களை கடலில் வீசுவதற்காகவே தனது கணவர் அடிக்கடி கடலுக்கு இரவில் சென்றதாகவும், அதனால் அவரின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மகிந்தாவின் ஆட்சிக்காலத்தில் மக்கள் எவ்வாறு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு இது சில ஆதாரங்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: ஈழம் ஈ நியூஸ் ஈழவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக