26 மே 2010

போர்க் குற்றவாளிகள் புலம்பெயர் தேசங்களில் இராஜதந்திரிகளாக பதவி வகிப்பதை தடுப்போம்!



சிங்கள பௌத்த பேரினவாத அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இன அழிப்புப் போரைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான இராஜதந்திரப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. தாயக விடுதலைக்கான களம் புலம்பெயர் தமிழுறவுகளின் கைகளுக்கு மாறியுள்ளதை அரசும் நன்கு உணர்ந்துள்ளது.
இதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடடிவக்கைகளை அது மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இன அழிப்புப் போரில் போர்க் குற்றங்கள் புரிந்த இராணுவத் தளபதிகள் இராஜதந்திரத் தூதுவர்களாகவும் தூதரக அதிகாரிகளாகவும் நியமிக்கப்படுகின்றனர். இந்த நியமனம் இரு வகை முக்கிய இலக்குகளைத் கொண்டிருக்கிறது.
போர்க் குற்றவாளிகளை இராஜதந்திரிகளாக மாற்றும் போது அவர்களுக்கு இராஜதந்திர விதிமுறைகளின் படி பாதுகாப்புக் கிடைக்கிறது. தூதரகத்தில் அமர்ந்தவாறு புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான பாரதூரமான நடவடிக்களை இவர்களால் மேற்கொள்ள முடியும் மனித நேயப் பணியாளர்களை கண்காணிப்பதற்கும் அவர்களை பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கும் அரிய வாய்ப்பு ஏற்படுகிறது.
தூதுவர் நியமனத்திற்கு முன்பாக இவர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் முக்கிய பணிப்புரை பற்றி செய்தி எமக்கு எட்டியுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் விடுதலை உணர்வும் தாயகப் பற்றும் உச்சநிலையில் இருக்கின்றன. விடுதலைப் போர் முற்றாக நிறுத்தப்படவில்லை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழுறவுகள் மனதில் அது தணியாத தாகமாக இருக்கிறது. உங்களால் இயன்ற மட்டிற்கு விடுதலை உணர்வை முடக்கும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளுங்கள்.
இந்த பணிப்புரைக்கு அமைவாக இலங்கையின் வெளிநாட்டுத் தூதரங்கள் தோறும் தமிழர்களுக்கு எதிரான பரப்புரைகளும் இடையூறுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் முடக்கி விடப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக எமது மனித நேயச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதற்கும் சிறையில் இடப்படுவதற்கும் இது தான் காரணம்.
இலங்கையில் அரசியல் இராணுவமயமாகியுள்ளது. அதன் இராணுவமோ அரசியல் மயமாகி உள்ளதோடு இராஜதந்திரத் துறையுமாகியுள்ளது. இது சென்ற நூற்றாண்டின் அதிபர் ஜெயவர்த்தன காலத்தில் ஆரம்பித்த சிங்களப் பேரினவாதப் பாரம்பரியமாகும். ஜெயவர்த்தனா தமிழர் படுகொலையை பெருமளவில் கச்சிதமாகச் செய்தவர்களுக்கு வெகுமதிகளை வழங்கினார். இதன் காரணமாக இராஜதந்திர பதவி கிட்டும் என்ற எதிர்பார்ப்பில் இராணுவத்தினர் இன அழிப்பைத் தீவிரப்படுத்தினர். ஜெயவர்த்தனா செய்த முதல் நியமனம் கடும் தோல்வியில் முடிந்தது. அவருடைய மிக நெருங்கிய உறவினரும் யாழ்ப்பாணத்தில் இன்பன் போன்ற விடுதலை வீரர்களை கடுஞ் சித்திரவதை செய்து படுகொலை செய்தவனுமாகிய புல் வீரதுங்கா என்ற இராணுவத் தளபதியைக் கனடாவுக்கான தூதுவராக நியமித்தார். கனடாத் தமிழர்கள் கொதித்தெழுந்து கடும் போராட்டத்தில் குதித்தனர்.
இதை அவதானித்த கனடா அரசு நாங்கள் இந்த அதிகாரியை படிப்படியாகச் செயலிக்கச் செய்து வெளியேற்றுவோம் உங்கள் போராட்டம் நியாயமானது. அதை இப்போதைக்கு நிறுத்தி வையுங்கள் போராட்டம் நிறுத்தப்பட்டது. தூதுவரும் வெளியேற்றப்பட்டார். இந்த வகையில் கனடா முன் மாதிரியான நாடு.
மணலாறு தமிழர்களை வெளியேற்றிச் சிங்களக் குடியேற்றம் செய்வதற்காக பல அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்தவனும், செம்மணிப் படுகொலைகள் போன்றவற்றிற்குப் பொறுப்பானவனுமான ஜானக பெரேராவை அதிபர் சந்திரிக்கா அவுஸ்ரேலியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமித்தார் அவுஸ்ரேலியாத் தமிழர்கள் மாத்திரமல்ல அவுஸ்ரேலியா மைய அரசின் எதிர்க்கட்சிகளும் ஜானக பெரேராவுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
சர்வதேச அபய ஸ்தாபனம் ஐானக பெரேராவின் நியமனத்திற்கு எதிரான அறிக்கைகளை வெளியிட்டது. போர்க் குற்றவாளியை அவுஸ்திரேலியா எப்படித் தூதராக வரவேற்க இணங்கியது என்ற கேள்வியை அது சர்வதேச மட்டத்தில் எழுப்பியது. இறுதியில் ஒரு குறுகிய காலம் அவுஸ்திரேலியாவில் பதவி வகித்த பின் ஜானக பெரேரா இராணுவ ஆட்சி நிலவும் இந்தோனேசியாவுக்குப் பணிமாற்றம் பெற்றுச் சென்றார்.
இலங்கை இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய 57ம் படையணியின் தளபதியாகச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் இப்போது ஜெர்மனியில் இலங்கைத் துணைத் தூதராகப் பதவி வகிக்கிறார். இவர் ஒரு போர்க் குற்றவாளி. எப்படி இவருடைய நியமனத்தை ஜேர்மனி ஏற்றுக் கொண்டதோ தெரியவில்லை.
போர் மரபுகள் மற்றும் விதிமுறைகளை மீறிப்போர் புரிந்தமை, வன்னியில் கொல்லப்பட்ட பொது மக்கள், பாரம்பரிய பூர்வீக நிலங்களில் இருந்து மக்களை இடம் பெயரச் செய்தல், மனிதத்திற்கு எதிராகப் போர் புரிதல், அநாதைகளாக அல்லற்படும் குழந்தைகள், விதவைகளாக வாழ்ந்த பெண்கள், உடல் உறுப்புக்களை இழந்தோர்கள், சித்தப்பிரமை அடைந்தோர்கள் சார்பில் நியாயம் கேட்க வேண்டிய பொறுப்பு எம்முடையதாகும்.
எனவே சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டியவர் தான் ஜேர்மனிக்கான துணைத் தூதுவர் மேஐர் ஜெனரல் ஜகத் டயஸ்.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் போன்ற படையதிகாரிகள் இன்னும் இலங்கையில் இருந்து தூதுவர் நியமனம் பெற்று வெளிவரும் சாத்தியங்கள் இருக்கின்றன. அதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை வெளியேற்றும் நடவடிக்கைக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்.
ஜேர்மன் வாழ் தமிழ் மக்களே!, புலம்பெயர் வாழ் மக்களே! உங்கள் நியாயபூர்வமான எதிர்ப்பை ஜேர்மன் அரசுக்கும், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத் தொண்டர்கள், மனித உரிமை அமைப்புக்களையும் சந்தித்து உங்கள் ஆதங்கத்தை தெரிவித்து அனைத்துலக அபய ஸ்தாபனத்திற்கும் கண்டனக் அறிக்கைகளை அனுப்புவதோடு போர்க் குற்றங்கள் பற்றிய தகவலையும் வழங்குங்கள்.
உலகத் தலைநகரங்கள் தோறும் கண்டனப் பிரசுரங்கள், கவன ஈர்ப்புப் போராட்டங்களை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்க்கு எதிராக குரல் கொடுப்போம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
பேராசிரியர் ப. சிவசண்முகம்

செயலாளர்,

தமிழீழ எதிலிகள் பேரவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக