04 அக்டோபர் 2010

இலங்கை போர்க் குற்ற நீதிமன்றத்தின் தொடர் நிகழ்வுகள்.

டப்ளின் சிற்றி பல்கலைக்கழகத்தின் சட்ட மற்றும் அரசாங்க பாடசாலையானது இலங்கையில் சமாதானத்துக்கான ஐரிஷ் மன்றத்துடன் இணைந்து இந்த வாரம் இரு நிகழ்வுகளை நடத்துகின்றது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கை போர்க் குற்ற விசாரணைகள் நீதிமன்றத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்து அவதானிக்கும் நிகழ்வுகளாகவே இவை நடக்கவுள்ளன. இலங்கை அரசாங்கமானது போர்க்குற்றம் புரிந்தது என்றும் மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்றும் டப்ளின் நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும், இன அழிப்புக் குற்றச்சாட்டை மேற்கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்மானம் எடுத்திருந்தது.
டப்ளினின் இரு நிகழ்வுகளில் முதலாவது நிகழ்வு ஒக்ரோபர் ஆறாம் திகதியன்று நடக்கவுள்ளது. டப்ளின் சிற்றி பல்கலைக்கழகத்தின் வணிகப் பாடசாலையில் நடக்கவுள்ள இந்நிகழ்வில் ஐ.நா இன் முன்னாள் துணைச் செயலாளர் டெனிஸ் ஹல்லிடே "இலங்கை குறித்து டப்ளின் தீர்ப்பு: செய்யப்படவேண்டியது என்ன?" என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
அடுத்தநாள் வியாழக்கிழமை நடக்கவுள்ள இரண்டாம் நாள் நிக்ழ்வு ட்ரினிற்றி காலேஜ் டப்ளினில், சிஞ்ச் தியேட்டரில் நடக்கவுள்ளது. இங்கு மனித உரிமைகள் காப்பாளர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் மேரி லாலர் "இலங்கையில் போர்க் குற்றங்கள்: சர்வதேச கருத்துக்கள்" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
மேற்குறிப்பிட்ட இரு பேச்சாளர்களுமே இலங்கை குறித்த மக்கள் நீதிமன்றின் தீர்ப்பாளர்களாக இருந்தவர்கள் ஆவர். மேற்படி உரைகளின்போது சில வீடியோ ஆதாரங்களும் வெளிவிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக