25 அக்டோபர் 2010

சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு பிரான்சில் சிலை திறப்பு விழா!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக செயல்பட்டு, இராணுவத்தினரின் திட்டமிட்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த மாவீரர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸ் நாட்டில் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை, தமிழ்ச்செல்வன் மறைந்த டிசம்பர் 2ம் தேதி திறக்கப்படுகிறது.
உலக போரியல் விதிமுறைகளுக்கு முரணாக, மாவீரர்களின் கல்லறைகளையும், நினைவு தூபிகளையும் இருந்த இடம்தெரியாது இலங்கை இராணுவம் அழித்துவரும் நிலையில், பிரான்சின் லா கூர்நெவ் நகரில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு சிலை ஒன்றை அமைப்பதற்கு அம்மாநகர சபை அனுமதி வழங்கியுள்ளது.
சு.ப.தமிழ்ச்செல்வனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தன்று இச்சிலை திறந்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக லாகூர்நெவ் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2007ம் ஆண்டு நவம்பர் இரண்டாம் நாள் லா கூர்நெவ் நகரசபை, தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து மிகப் பிரமாண்டமாக தமிழ்க் கிராமம் என்ற நிகழ்வு ஒன்றை நடத்தியது. அதில் பிரான்சில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கொண்டன.
அந்நிகழ்வுக்கு லா கூர்நெவ் நகரசபை எமது சமாதான தூதுவராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனை பிரதம விருந்தினராக அழைத்திருந்தனர். அவ்வேளையில் தாயகத்தில் பிரச்சினை காரணமாக வர முடியாது என்றும், அன்றைய நாளில் தொலைபேசி மூலமாக வாழ்த்துக் கூறுவதாகவும் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்றைய நாளே அவர் வீர மரணத்தைத் தழுவிக் கொண்டார். லா கூர்நெவ் நகரசபை தலைவர் அன்றைய நாளில் அவரின் மறைவிற்கு வீரவணக்கத்தை செலுத்தி நிகழ்வுகளை நடத்தினார்.
தற்போது சு.ப.தமிழ்ச்செல்வனின் மூன்றாமாண்டு நினைவு நாள் அன்று அவருக்கான நினைவுச் சிலையினை அமைக்க லா கூர்நெவ் நகரசபை ஏற்கனவே அவரது நினைவாக நடப்பட்டுள்ள மரத்திற்கு அருகில் இடம் ஒதுக்கித் தந்துள்ளது.
லா கூர்நெவ் தமிழ்ச்சங்கமும் Le sens de l’art (la galerie) இணைந்து சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலையினை அமைத்து வருகின்றனர்.
இதையொட்டி நவம்பர் மாதம் முதலாம் நாள் லா கூர்நெவ் நகர சபை முன்னால் காலை 11 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக