29 அக்டோபர் 2010

வடக்கில் சிங்கள மக்களுக்கு வழங்கும் வசதிகள் தமிழருக்குத் தெற்கில் கிடைக்குமா? : சிவாஜிலிங்கம் கேள்வி.

வாரந்தோறும் தெற்கிலிருந்து வட பகுதிக்கு வரும் சிங்கள மக்கள் , அரச பண்டகசாலைகளிலும், அரச பாடசாலைகளிலும் தங்க வைக்கப்படுகின்றனர். இதே போன்ற வசதிகள், வடக்கிலிருந்து வரும் தமிழ் மக்களுக்குத் தெற்கில் வழங்கப்படுமா?" என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
"கடந்த 22,23,24 ஆந் திகதிகளில், இலங்கை மருத்துவ பீடமும், யாழ் மருத்துவ பீடமும் இணைந்து மாநாடு ஒன்றை, யாழ். பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் நடத்தின. அச்சமயம் அங்கு சுமார் 1000க்கும் மேற்பட்டோர் குழுமியதால் பெரும் கூச்சல் நிலவவே, மாநாட்டு மண்டபத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு சிறு சச்சரவேற்பட்டது. நூலக ஊழியர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். புத்தகங்களையும் சேதப்படுத்தினர்.
அச்சமயம், சிலர், தாம் ஜனாதிபதி செயலகத்தில் வேலை செய்பவர்கள் என்று கூறி அங்கிருந்தவர்களை மிரட்டினர். இது குறித்துப் பொலிஸாரும் இராணுவத்தினரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
இவ்வாறான சம்பவங்கள் வடக்கில் இன்று வாடிக்கையாகி விட்டன. தெற்கிலிருந்து வருவோர், இங்குள்ள அரச கட்டடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்கள் இங்குள்ள உணவகங்களுக்குச் சென்று அடாவடித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர்.
ஆயிரம் ரூபாவுக்கு மேல் கடைகளில் பொருட்கள் வாங்கும் இவர்கள், தாம் 1000 ரூபா மட்டுமே தருவோம் என்று கூறி, தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்துகின்றனர்.
தமது மாமன், மச்சான் எல்லோரும் இராணுவத்தில் உள்ளனர் என்று கூறி இவர்கள் தமிழ் மக்களையும், வர்த்தகர்களையும் பல வழிகளிலும் தொல்லைப்படுத்துகின்றனர்.
விடுமுறை நாட்கள் என்றால் இவர்களுக்குப் பாடசாலைகளில் இடம் ஒதுக்கித் தரப்படுகிறது. இதே சலுகையைத் தமிழ் மக்களுக்குத் தெற்கில் மட்டுமல்ல, வேறெந்த பகுதிகளிலாவது அரசாங்கம் செய்து தருமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக