01 செப்டம்பர் 2010

காவல்துறை மீது கலைஞருக்கே நம்பிக்கை இல்லை.



தன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் மீது முதல்வர் கருணாநிதிக்கு நம்பிக்கை போய்விட்டது என, தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்திய உணவுக்கழகத்தின் சேமிப்பு கிடங்கில் உள்ள உணவு தானியங்கள் பாழாகி இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதனை பாதுகாத்து ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில் மக்கள் பசியும், பட்டினியுமாக உள்ள சூழ்நிலையில் இத்தகைய நிலைமை இருக்கக்கூடாது.
தற்போது 9 ஆயிரத்து 144 டன் அரிசியும், 2 ஆயிரத்து 446 டன் கோதுமையும் பாழாகி இருப்பதாக தெரிகிறது. எதிர்காலத்தில் மத்திய அரசு இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நாடு முழுவதும் அரசு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு தானியங்களை வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி குறித்து பாஜக எந்த முடிவும் எடுக்கவில்லை. கூட்டணி இல்லாவிட்டாலும், ஒரு சில இடத்தில் நின்று சொந்த பலத்தில் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் மீது முதல்வர் கருணாநிதிக்கு நம்பிக்கை போய்விட்டது. கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைக்கு பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும். இதேபோல் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசு கச்சத்தீவை மீட்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக