11 செப்டம்பர் 2010

ஏகாதிபத்தியத்தை சித்தரிக்கும் சுவரொட்டியை அச்சிட்ட குற்றச்சாட்டில் மங்கள எம்.பியைக் கைதுசெய்ய நடவடிக்கை!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் சர்வாதிகார நோக்கத்தை எடுத்துக் காட்டும் வகையில் சுவரொட்டியை நிர்மாணித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் இணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவை கைதுசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சே நேற்று முன்தினம் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறைத் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
மங்கள சமரவீரவைக் கைதுசெய்வதற்குத் தேவையான பின்புலத்தை ஏற்படுத்தும் பொறுப்பு
அரச ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், அரசாங்கத்தின் தினமின பத்திரிகை ஜனாதிபதிக்கு சேறுபூசும் சுவரொட்டி மங்களவினால் நிர்மாணிக்கப்பட்டது என செய்தி வெளியிட்டிருந்தது.
சந்தேக நபர்களை விடுவிக்க மிரிஹான காவல்நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர் எனவும் அந்தப் பத்திரிகை உபதலைப்பையும் வெளியிட்டிருந்தது.
அதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே விற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஜே.வி.பியின் அச்சகம் ஒன்றில் இந்த சுவரொட்டியை அச்சிட்ட சம்பவமானது மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினரின் சூழ்ச்சியென காவல்துறை விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக தினமின கூறியுள்ளது.
இதுசம்பந்தமாக வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காக மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரத்தியேக செயலாளர் சுதத் சந்திரசேகர ஆகியோர்காவல்துறைக்கு அழைக்கப்படவிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டியை அச்சிட்ட பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் இணைப்பாளர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாக மங்கள சமரவீர பகிரங்கமாக ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக