17 செப்டம்பர் 2010

கரடியனாறு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் படையினர் விசாரணை!

மட்டக்களப்பு கரடியனாற்றில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசேட படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.அரசியல் காரணமாகவோ அல்லது நாசகார வேலை காரணமாகவோ இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பதை தாம் முற்றாக நிராகரிகரிக்கிறோம். படையினர் விசாரணைகளில் ஈடுப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசாங்க பகுப்பாய்வாளர்களை உள்ளடக்கிய விசேட குழுவினர், கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு பிரதமர் டி.எம்.ஜயரட்ன செல்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றிருப்பதால் பதில் பாதுகாப்பு அமைச்சராக டி.எம்.ஜயரட்ன செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சீன நிறுவனமொன்றிற்குச் சொந்தமான வெடிபொருள்கள் நிரப்பிய 3 கொள்கலன்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டபோது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறினார்.
முதலில் ஒரு கொள்கலனிலிருந்து வெடிபொருள்களை இறக்கியபோது ஏற்பட்ட வெடிப்பையடுத்து ஏனைய கொள்கலன்களும் வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக