25 செப்டம்பர் 2010

இலங்கை போர்க் குற்ற விசாரணை அவசியம் - அமெரிக்க பல்கலைக்கழகம்.

இறுதிக்கட்டப் போரில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரணை செய்யவேண்டும் என்றும் அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது. போர்க்குற்ற விசாரணைக்காக ஐக்கிய நாடுகள் நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். வெளியாரின் தலையீடு எதுவுமின்றி தமிழ் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கவேண்டும் என்று அப்பல்கலைக்கழகம் நேற்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கைப் படையினரே போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் தமிழ் இன அழிப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இலங்கை அரசோ நியாயத்தை வலுப்படுத்துவதற்கு முயற்சி செய்வதை விடுத்து மனித உரிமை மீறல்களைப் புரிந்தோரை அடையாளம் காணும் முயற்சிகளைத் தொடர்ந்தும் தடுத்து வருகின்றது என்றும் அவ்வறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
தமது படைகள் ஆயிரக் கணக்கான தமிழ்ப் பொதுமக்களைக் கொலை செய்ததை வெளிக்காட்டிக் கொள்வதில் ஆர்வம் செலுத்தாத அரசு விடுதலைப் புலிகளைக் குற்றவாளிகள் எனக் காண்பிப்பதில் ஆர்வம் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ள அறிக்கை, இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவும் அரச படைகளுக்கு ஆதரவாகவே செயற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா நிபுணர் குழு பற்றியும் குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கை, ஆரம்பத்தில் இந்நிபுணர் குழு தமது விசாரணையைத் தொடர நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது, ஆனால் இப்போது கொழும்பு அந்நிபுணர் குழு தனது கடமைகளை நிறைவேற்றுவதைத் தடைசெய்துவிட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

1 கருத்து:

  1. நல்லிணக்க குழு என்பதே அரசின் ஒரு அங்கமாக இருக்கும் போது உண்மைகள் எப்படி வெளிவரும். இனியும் காலம் கடத்தாது ஐ.நா தனது செல்வாக்கைப் பாவித்து விசாரணைகளை துரிதப் படுத்தி தமிழருக்கு நீதி வழங்கவேண்டும். பல அமைப்புக்கள் கூறியும் இன்னமும் அவ்வமைப்பு பாரமுகமாகவே உள்ளது. இந்த சநதர்ப்பத்தில் குற்றம் புரிந்த மஹிந்தவை ஆதரிப்பதற்கான ஏற்பாடுகளே உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐ.நாவும் அதற்கு துணைபோவதான தோற்றப்பாடே தெரிகின்றது.

    பதிலளிநீக்கு