28 செப்டம்பர் 2010

சந்திரசூரியர்கள் இருப்பது எவ்வாறு உண்மையோ அதேபோல் தேசியத்தலைவர் இருப்பதும் உண்மை!

சந்திர சூரியர்கள் ருப்பது எவ்வாறு உண்மையானதோ அது போன்று தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பது உண்மை. திருச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார்.
புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்களும் மனித உரிமை மீறல்களும் என்ற தலைப்பில் திருச்சியில் மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.
இன்று காலை 9.30 முதல் மாலை 4.00 மணிவரை நடைபெற்ற நிகழ்வு திருச்சியில் நடைபெற்றுள்ளது.
தமிழக கல்லூரி மாணாக்கர் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் அய்யா பழ.நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் மாணவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். தேசியத் தலைவரது இருப்பு தொடர்பாக மாணவர் ஒருவர் வினவியபோது பதிலுரைத்த நெடுமாறன் அய்யா இத்தகவலை உறுதிபடத் தெரிவித்தார்.
சந்திர சூரியர்கள் இருப்பது எவ்வாறு உண்மையானதோ அது போன்று தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பது உண்மை. ஐந்தாம் கட்ட ஈழப்போரிற்கான தயாரிப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தலைவர் பிரபாகரன் அவர்கள் விரைவில் வெளிப்படுவார். ஈழப்போரை தலைமைதாங்கி முன்னெடுத்து தமிழீழத்தை அமைப்பார் என உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எப்போது எப்படி வருவார் என்பது அவருக்கு மாத்திரமே தெரிந்த இரகசியமாகும் எனத் தெரிவித்தார்.
இக் கருத்தரங்கில் பெங்களுரைச் சேர்ந்த பேராசிரியரும் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் சிங்கள அரசை போர்க்குற்றவாளியாக ஏன் அறிவிக்க வேண்டும் என வாதாடி தமது கருத்துக்களை பதிவு செய்தவர்களில் ஒருவருமான முனைவர்.பால் நியூமன் அவர்களும் சமூகப் போராளியும் வழக்கறிஞருமான பாண்டிமாதேவி அவர்களும் மாணவர்களுக்கு கருத்துரையாற்றினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக